டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!
கோப்புகள் இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சிபிஎம் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் மேசையில் முறைகேடுகள் தொடர்பான 3 கோப்புகள் இருந்தால் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் தொனியில் பேசுவது பொருத்தமானதல்ல என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முழுமையாக விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் அரசியல் சூழல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோப்புகள் விவகாரத்தில் முதலமைச்சர் கையாண்ட விதத்தை விமர்சித்தார்.
என் மேசையில் 3 கோப்புகள் உள்ளன, எப்போது வேண்டுமானாலும் திறப்பேன் எனக் கூறுவது முறையல்ல; ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் இருக்கும் கோப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவது போன்ற பாணியைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்நாடு அரசு நேர்மையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!
தொடர்ந்து முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் குறித்துப் பேசிய சண்முகம், "சுமார் 13 நீர்நிலைகளையும், 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களையும் அழித்து உருவாக்கத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
ஆனால், அந்த நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி முழுமையாக விவசாயிகளிடமே திருப்பித் தர வேண்டும்; மாற்று இடத்தை தேர்வு செய்யும் போது மக்களிடம் கருத்து கேட்டு நெரிசல் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், குடும்பங்களுக்கு 3 இலவச சிலிண்டர்களுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முடிவை வரவேற்ற அவர், பெண்களுக்கு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணமில்லாப் பயணத்தை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு பகுதிவாரியாக அன்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!