என் தாயின் மரண வலி மீண்டும் என் மீது பாய்ந்தது... மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா...!
கரூர் கோரச்சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா மவுனம் கலைத்தார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நாற்பது பேர் பலியாகி இருந்தனர். இன்று மேலும் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில் வலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் யாரும் இந்த கோரச் சம்பவம் குறித்து எதுவும் பேசாத நிலையில், ஆதவ் அர்ஜுனா மௌனம் கலைத்தார்.
என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருவதாகவும் இந்த மரணங்கள் நெஞ்சை இன்னும் உலுக்கிக் கொண்டு இருப்பதாகவும் மரணத்தின் வலியையும் அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்து வருவதாகவும் கூறி உள்ளார்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன் எனவும் அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூரில் உண்மையில் நடந்தது என்ன? விசாரணையை தொடங்கிய தனிநபர் ஆணையம்..!
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள் என்றும் அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை எனவும் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுவதாக அவர் கூறினார்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன் என்றும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவட்ட செயலாளர் தலைமறைவு... தவெக நிர்வாகிகள் செல்போன் "SWITCH OFF"...! என்னதான் நடக்குது?