×
 

தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ்நாட்டில் குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தவெக-விற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கீழ்த்தரமான குதிரை பேர கலாச்சாரத்தைத் தவெக அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், தான் அமைத்துள்ள பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், இந்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள மோசமான குதிரை பேர அரசியலை நடத்தி வருகிறார். தான் எந்தக் கட்சியை 'தீய சக்தி' என்று வருணித்து தேர்தல் களம் கண்டாரோ, அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒருசில கட்சிகளைத் தேடிப்போய் தவெக ஆதரவு கேட்பதாக அவர் விமரிசித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் விவகாரத்தை ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நாடகம் என்று இபிஎஸ் சாடியுள்ளார். அதிமுகவின் உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பாலும், தியாகத்தாலும் வெற்றிபெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களைச் சோஃபாவோடு போய் 'புஷ்பா' பட பாணியில் தவெக ஆதரவு பெற்றுள்ளது. கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் 3 எம்.எல்.ஏக்களிடமிருந்து ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள தவெக அமைச்சர் (ஆதவ் அர்ஜுனா) அறையில் அவர்களுடைய கைகளில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் இவர்களின் வெட்டவெளிச்சமான குதிரை பேரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

ராஜினாமா செய்த மதுராந்தகம் (மரகதம் குமரவேல்), தாராபுரம் (சத்யபாமா) மற்றும் பெருந்துறை (ஜெயக்குமார்) தொகுதி எம்.எல்.ஏக்களின் துரோகம் குறித்துப் பேசிய அவர் அதிமுக இயக்கம் எத்தனையோ துரோகச் செயல்களையும், முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கித்தான் மக்கள் பணியாற்றி வருகிறது. தற்போது ராஜினாமா செய்துள்ளவர்கள் திரைப் பிரபலத்தின் (விஜய்) சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துத்தான் வெற்றி பெற்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற துரோகச் செயல்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம், வீழ்த்திவிடலாம்; அந்த இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும் என்று எச்சரித்துள்ளார்.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை', 'பழைய மந்தையில் புதிய கள்' என்பதுபோல அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் இந்த 'புதிய கரகாட்ட கோஷ்டிக்கு'த் தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.


 

இதையும் படிங்க: அதிமுகவில் என்னதான் நடக்குது..!! மீட்டிங்கில் மிஸ்ஸான முக்கியப்புள்ளிகள்..!! பரபரக்கும் சூழல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share