பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கையாளாமல் இணக்கமாகச் செல்வதே நல்லது என்று பாஜக பிரமுகரும், பிரபல நடிகையுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்து அரசியல் களம் அனல் பறந்து வரும் வேளையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும், பிரபல நடிகையுமான கஸ்தூரி, புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக-வின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து மிகக் கடுமையான, பரபரப்பான கருத்துகளை முன்வைத்துப் பேட்டியளித்துள்ளார்.
மத்திய அரசுடன் இணக்கம் தான் விஜய்க்கு நல்லது: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜகதான் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கஸ்தூரி, விஜய் தற்போது முள்ளிவாய்க்கால் என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசி, தனது புதிய ஆட்சியில் காங்கிரஸை நம்பி உட்கார்ந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு என்ன கொள்கை இருக்க முடியும்? மீண்டும் மீண்டும் மதவாதம் என்ற திமுகவின் பழைய பல்லவியையே அவரும் பாடி வருகிறார்.
பாசிசம், மதவாதம் பேசுபவர்கள் தமிழக மக்கள் நலனையோ, லஞ்ச ஊழலற்ற ஆட்சியையோ வேண்டாம் என்கிறார்களா? என்னைப்பொறுத்தவரை மத்திய பாஜக அரசுடன் இணக்கமாகச் செல்வதே விஜய்க்கு நல்லது. மத்திய அரசை வீணாக எதிர்த்துக்கொண்டு தேவையற்ற எதிர்ப்புகளை முதலமைச்சர் விஜய் தன் தலைமேல் இழுத்துப் போட்டுக் கொள்ள மாட்டார் என்பதே எனது ஆழமான நம்பிக்கை என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
திமுக தோற்றாலும் தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சிதான்' என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது குறித்துக் கேட்டபோது, இது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதைப் போலத்தான் உள்ளது.
தேர்தல் தோல்வியை அப்பட்டமாக ஒப்புக்கொள்ள முடியாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் கதறுவதை நாம் அனைவரும் நிம்மதியாகப் பார்த்து ரசிக்கலாம். அதற்காகவே நான் முதலமைச்சர் விஜய்க்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நக்கலாகக் குறிப்பிட்டார்.
தவெக தற்போது எதிர்பாராத மாபெரும் வெற்றியைப் பெற்று ட்ரெண்டிங்கில் இருப்பதால், மாற்றுக்கட்சியினர் அந்தப் பேரியக்கத்தை நோக்கி ஓடி வருகிறார்கள். வெற்றியைப் பறிகொடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களிடம் சரணடைவது அரசியலில் சாதாரண விஷயம். நாளை அ.தி.மு.க அதிகாரத்திற்கு வந்தால் இவர்களெல்லாம் அங்கே ஓடிவிடுவார்கள்.
விஜய் ஆட்சியில் நல்ல எண்ணம் இருக்கிறது, ஆனால் அதற்கான செயல்பாட்டிற்குச் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதேவேளையில், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. கடைசி கட்டத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களை மாற்றுவதற்கான கட்டமைப்பு இப்போதைக்கு விஜய்யிடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. புதிய அமைச்சரவையில் உள்ள அனைவரும் புதியவர்கள்; ஏன், பதவியேற்க வரும் பொழுது கூட தவெக அமைச்சர் கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழைக் கோட்டையிலேயே மறந்துவிட்டு வந்த கூத்தும் அரங்கேறியுள்ளது என்று கஸ்தூரி சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!