நீட் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள்.. மார்தட்டி பெருமிதத்துடன் வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!
நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நீட் தேர்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் டாப் 100 இடங்களை பிடித்துள்ளனர். அதில் சூர்யநாராயணன் என்ற மாணவர் தேசிய அளவில் 27வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இந்த தேர்வை 22.7 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் அதில் 12.36 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 5 லட்சத்து 14 ஆயிரத்து 63 மாணவர்களும், 7 லட்சத்து 22 ஆயிரத்து 462 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்களில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!
இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது;
நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் ரிசல்ட் வெளியிட தடையில்லை..! மறுதேர்வு கோரிய மாணவர்களின் வழக்கு தள்ளுபடி..!