அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு? அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..
தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருப்பது போன்ற ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் அந்த போட்டோவில் இருப்பது நிகிதாவே இல்லை என பாஜ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது.திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் கொடுத்த திருட்டு புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரித்த க்ரைம் டீம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து துன்புறுத்தினர். இதில் தான் அவர் மரணம் அடைந்தார்.
லாக்அப் டெத்துக்கு காரணமாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அஜித்குமார் திருடவில்லை. அவன் அப்பாவி என்று பல தரப்பினரும் சொல்லி வருகின்றனர். இதற்கிடையே புகார் கொடுத்த நிகிதாவின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நிகிதாவுக்கு எதிராக கொடுத்த பேட்டி திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நிகிதா மூஞ்சை மூடிக்கொண்டு பேசும் வீடியோவும் வெளியானது.அதில் தனது தாய் சிவகாமிக்கு வீல் சேர் ஏற்பாடு செய்து கொடுக்க அஜித்குமாரிடம் பேரம் பேசியது பற்றியும் கூறியுள்ளார். வீடியோவில் நிகிதா பேசியதை வைத்து பார்க்கும் போது, திருமங்கலத்தில் ஸ்கேன் எடுக்க டாக்டர் நகைகளை கழற்ற சொன்னதால் அதனை பையில் போட்டேன் என்கிறார். ஆனால் ஸ்கேன் எடுக்கவில்லை. அங்கிருந்து கழற்றிவைத்த நகை பையை காரில் பின் சீட்டில் வைத்துவிட்டு 40 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து திருபுவனம் கோயிலுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?
அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அஜித்குமாரிடம் வீல் சேர் ஏற்பாடு செய்து தர சொல்லி இருக்கிறார். அவரிடமே கார் சாவியும் கொடுத்து கார் பார்க் செய்ய சொன்னதாக சொல்கிறார். தரிசனம் முடிந்து வந்த பிறகு வீல் சேர் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அஜித்குமார் 500 ரூபாய் கேட்டுள்ளார். இது இலவச சேவை தானே என வாக்குவாதம் செய்த நிகிதா 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அதன் பிறகே நகை காணாமல் போனது தெரியவந்து அறநிலையத்துறைக்கும், போலீசுக்கும் புகார் கொடுத்ததாக சொல்கிறார்.
இதில் கார் பார்க்கிங் செய்து கொடுத்தார் என்பதற்காக மட்டுமே அஜித்குமாரை குற்றவாளி போல அணுகி உள்ளனர். எந்த இடத்தில் நகை காணாமல் போனது என்பது குறித்து நிகிதாவுக்கே உறுதியாக தெரியவில்லை. இதனால் உண்மையில் என்ன நடந்தது என்ற குழப்பம் ஏற்பட்டது. பலரும் நிகிதா மீது சந்தேகம் கிளப்பினர். உடனே திருமங்கலத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு அவர் தலைமறைவானார். இந்த நிலையில் தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருப்பது போன்ற ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் அந்த போட்டோவில் இருப்பது நிகிதாவே இல்லை என பாஜ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ செயலாளர் ராஜினி என்பது தெரியவந்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது அண்ணாமலையுடன் ராஜினி போட்டோ எடுத்துக்கொண்டார். அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிலர், அண்ணாமலையுடன் இருப்பது நிகிதா என பதிவிட்டுள்ளனர். இது குறித்து பொன்னேரி போலீசில் ராஜினி தனது ஆதரவாளர்களுடன் சென்று புகார் அளித்தார்.
திருபுவனம் அஜித்குமார் லாக்அப் மரண வழக்கை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கிறது. எனது போட்டோவை நிகிதா போட்டோ போல திரித்து பதிவிட்டு வருகின்றனர். பாஜகவிற்கு தொடர்புள்ளது போல சித்தரிக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜினி புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!