மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!
விவசாயிகளின் கோரிக்கைகளைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி. அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகளின் நிலைப்பாடு குறித்துப் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்துக் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் காவிரி - அய்யாறு இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.
இதையும் படிங்க: 73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!
தற்போது வழங்கப்படும் விவசாய நிதியுதவித் தொகையை (PM-Kisan போன்ற திட்டங்கள்) மாதத்திற்கு ₹5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, அதைச் செயல்படுத்த உறுதி அளிக்கும் கட்சிகளுக்கே வரும் தேர்தலில் விவசாயிகளின் ஆதரவு இருக்கும் என அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை மாநில அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்காத பட்சத்தில், வாரணாசி அல்லது பிரதமர் போட்டியிடும் தொகுதியில் மீண்டும் விவசாயிகள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என்றும் அய்யாகண்ணு எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!