மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி... பிரதமருக்கு நன்றி சொன்ன நயினார்..!
மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி என நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதினோராவது நிதிநிலை அறிக்கை, வளர்ந்த இந்தியா என்னும் கனவை நனவாக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இளைஞர் சக்தியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் 2026-ன் சில சிறப்பான அம்சங்களை மக்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன் என்றும் கூறினார்.
நடப்பாண்டில் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.12.20 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாரத வளர்ச்சியில் நமது மத்திய அரசு காட்டும் அக்கறையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. சிறு குறு தொழில் நிறுவன வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு, செமிகண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு, தரவு மையங்கள் மற்றும் கிளவுட் நிறுவனங்களுக்கு 2047 வரை முழுமையான வரிவிலக்கு, புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பல லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தேசம் முழுவதுமுள்ள 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் கண்டென்ட் கிரியேட்டிவ் ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு. டிஜிட்டல் பாரதக் கனவை நனவாக்கும் ஓர் வரவேற்கத்தக்க முயற்சி என்று கூறினார்.
வேளாண் துறைக்கு ரூ.1.4 லட்சம் கோடியை ஒதுக்கியதோடு, விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் AI செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருத்திருக்கிறது மத்திய அரசு. மேலும், பாசன வசதியை மேம்படுத்தும் வகையில், 500 அணைகளை கட்டுவதற்கான திட்டம், தென்னை மற்றும் முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவை விவசாயிகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் முக்கிய அறிவிப்புகளாகும். காதி, கைத்தறி ஆகியவற்றின் விற்பனையை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி நெசவாளர்களின் நல்வாழ்வுக்கும் வித்திட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கருத்து சுதந்திரம் பறிப்பு..! முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம்..! சாடிய நயினார்..!
மொத்தத்தில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி, “எல்லாருக்கும் எல்லாம்" எனும் கோட்பாட்டை செயல்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது என்று தெரிவித்து உள்ளார். முன்னேற்றப் பாதையில் பாரதம் வீறுநடையிடுவதை எளிதாக்கியுள்ள மத்திய பட்ஜெட் 2026-ஐ மனதார வரவேற்போம் என்றும் ஒன்றிணைந்து முன்னேறுவோம் எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: கழிவு அள்ளுற உள்ளங்களுக்கு கொடுக்கிற நன்றி கடனா இது? தரமற்ற உணவு..! நயினார் கொந்தளிப்பு..!