×
 

மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

விளாத்திகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

விளாத்திகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் அடையாளத்தை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சமூக வலைதளங்களில் பரப்பிய 6 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளாத்திகுளம் பகுதியில் மாணவி ஒருவர் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்களைச் சில நபர்கள் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மதன், பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களின்படி, அடையாளங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட 6 நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக எஸ்பி மதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பாதிக்கப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ அல்லது அவர்களை அடையாளம் காட்டும் எந்த ஒரு தகவலையும் பொதுவெளியில் பகிரக் கூடாது.மீறிச் செயல்படுவோர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சமூக வலைதளக் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் மீது மரபணு (DNA) சோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இவ்வழக்கில் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தனிப்படைகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தனியுரிமை மற்றும் சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட புகைப்படங்களையோ அல்லது பெயரையோ யாரும் பகிர வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share