ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பக் கூடாது என்று நடிகர் ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கப் பாடகி கெனிஷாவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துக்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஆர்த்தி தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி ஆகியோர் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ரவி மோகனின் தோழியான பாடகி கெனிஷா தனக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாக ஆர்த்தி ரவி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆர்த்தி ரவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முன்வைத்த முக்கிய வாதங்களாவது, கெனிஷா பதிவிட்டு வரும் அவதூறு கருத்துக்களால் ஆர்த்தி ரவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்..!! குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்..!! லாரி தண்ணீரை நம்பும் மக்கள்..!!
பதிவுகளை நீக்கக் கோரிக்கை: சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள அவதூறான கருத்துக்களை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மூன்றாவது நபர் ஒருவர் இதுபோன்று தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பதைத் தடுக்க வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்கப் பாடகி கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த மனு குறித்துப் பதிலளிக்கும்படி கெனிஷாவுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சனை கடந்த சில மாதங்களாகப் பேசுபொருளாக உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவு திரைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!