மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்! முதலமைச்சருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை!
மேகதாது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள வந்தே மாதரம் பாடல் தொடர்பான மசோதா முற்றிலும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தேசிய அரசியல் மற்றும் மாநில நதிநீர் விவகாரங்கள் குறித்துத் தனது கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், வந்தே மாதரம் பாடல் தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி, மக்களவையில் அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சபாநாயகர் அவையை ஒத்திவைத்துவிட்டார். நாட்டில் எவ்வளவோ முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய சூழலில், இந்த வந்தே மாதரம் பாடல் மசோதாவை நிறைவேற்றுவது மட்டுமே பாஜகவிற்கு மிக முக்கியமானதாக உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!
தமிழ்நாட்டைச் சார்ந்த வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், விசிக தொடர்ந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. மதச்சார்புடைய பாடல் என்பதால் வந்தே மாதரம் பாடலைப் கட்டாயம் பாட வேண்டிய நிலை இதுவரை இல்லாமல் இருந்த சூழலில், இனிமேல் அனைவரும் கட்டாயம் பாட வேண்டிய நிலையை இந்த மசோதா உருவாக்குகிறது. இது முற்றிலும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், பிற மதங்களைச் சார்ந்த மக்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். இந்தப் பாடலைப் பாட மறுப்பவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தோடு மட்டுமே பாஜக அரசு இதனைச் செய்கிறது எனச் சாடினார்.
தொடர்ந்து காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய திருமாவளவன், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என விவசாயச் சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், திட்டமிட்டவாறு முதலமைச்சர் கர்நாடகா செல்வதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார்.
தற்போதைய சூழலில் முதலமைச்சரின் சந்திப்பு விவகாரத்தில் கர்நாடக அரசு இப்போது பின்வாங்கி வருகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். திருமாவளவனின் இந்த அதிரடிப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!