தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக அடுத்த ஏழு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று மற்றும் நாளை சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகப் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 40.0 மி.மீ (4 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. அதே சமயம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் சுட்டெரிக்கும் வெயில் பதிவாகியுள்ளது.
நிலவி வரும் வளிமண்டல மாற்றங்களால், இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை (செப்டம்பர் 3) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 4 முதல் 8-ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மழை ஒருபுறம் இருந்தாலும், உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு வேளையில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!