கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!
பொள்ளாச்சி வழக்கை போல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு விரைவில் வரும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம் மற்றும் ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேர் கைதாகினர்.
இந்த 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்பில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். அதன்படி 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், சதீஷ், ஹெரன்பால் ஆகியோருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பாபு, அருளானந்தம், அருண் குமார் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் 5 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 85 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரித்து வழங்கவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதகை மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்..!
இந்த நிலையில் இன்று காலை ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி வழக்கை போல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு விரைவில் வரும் என கூறி இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரச்சாரம் செய்தேன். அதுபோலவே தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் கூட பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவே சாட்சி என்று பேசியிருந்தேன். பொள்ளாச்சி வழக்கில் தண்டனை கிடைத்தற்கு தானே காரணம் என ஈபிஎஸ் பொய் சொல்லி வருகிறார் என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இன்று முதல்வர் ஸ்டாலின், தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு. விசாரித்தது CBI. தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் ஸ்டாலின்.?
இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்தகேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?
தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது. அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.ஸ்டாலின், நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக. நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு. மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்!
இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்? மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்.. இவருக்கு இதே வேலை தான்! முக்கிய புள்ளியை சாடிய முதல்வர்..!