கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?
கோவையில் பரபரப்பு - காணாமல் போன 13 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை - நண்பர்கள் 2 பேர் கைது
கோவை இருகூர் அருகே 13 வயது சிறுவன் ஒருவன், அவனது நண்பர்களாலேயே, மது பாட்டில் மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் அப்பகுதி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் திவிஸ் (13), கடந்த 15-ஆம் தேதி மாலை முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார், சிறுவன் திவிஸின் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், திவிஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. இதனையடுத்து, இருகூர் ரயில்வே சிறிய மேடை அருகே மறைவான ஒரு பகுதியில் வீசப்பட்டிருந்த திவிஸின் உடலை போலீஸார் மீட்டனர். பின்னர், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 15-ஆம் தேதி, திவிஸ் தனது நண்பர்களுடன் இருகூர் பொங்காளியம்மன் கோவில் அருகே உள்ள கால்வாய்க்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது சிறுவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திவிஸின் நண்பர்களான 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள், திவிஸைக் கல்லாலும், மது பாட்டிலாலும், கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த திவிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து உடலை அதே பகுதியில் குழி தோண்டி புதைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட திவிஸின் நண்பர்களான இரு சிறுவர்களையும் சிங்காநல்லூர் போலீஸார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இருகூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிபயங்கரம்; பெட்ஷீட், தென்னை ஓலைகளால் சுற்றி 2 இளைஞர்கள் எரித்து கொலை? - 2 கோர உடல்கள் கண்டுபிடிப்பு...!