மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!
சமயபுரம் அருகே சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன். ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை.
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், 2014-இல் உடல்நலக் குறைவால் பணியை ராஜினாமா செய்தார். தற்போது தனது மனைவி இளஞ்சியத்துடன் (48) சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு பார்த்திபன் (32) என்ற மகனும், பிரியா (28) என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
மகன் பார்த்திபன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவருக்குத் தீவிரமான மதுப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மது அருந்தும் போதெல்லாம் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது பெற்றோர் மற்றும் தங்கையை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், தனது வருமானம் குடிப்பதற்கே போதாததால், ஆன்லைனிலும் வெளிநபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தனது தந்தை நடராஜனிடம் சொத்துகளை விற்றுப் பணம் தருமாறு போதையில் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
தற்போது ஈரோட்டில் வேலை பார்த்து வந்த பார்த்திபன், இன்று காலை மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்றுப் பணம் தருமாறு மிரட்டி, அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட நடராஜன், மகனைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிபயங்கரம்; பெட்ஷீட், தென்னை ஓலைகளால் சுற்றி 2 இளைஞர்கள் எரித்து கொலை? - 2 கோர உடல்கள் கண்டுபிடிப்பு...!
மீண்டும் இன்று மாலை கடும் போதையில் வந்த பார்த்திபன், தந்தை நடராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடராஜன், அருகில் இருந்த இரும்புக் குழாயை எடுத்துப் பார்த்திபனை அடிக்கத் துரத்தியுள்ளார். பயந்துபோய் தோட்டத்திற்குள் ஓடிய பார்த்திபனைத் துரத்திச் சென்ற நடராஜன், அவரது தலையில் பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகன் இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த நடராஜன், உடனடியாகச் சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சமயபுரம் போலீசார், தந்தை நடராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.....
இதையும் படிங்க: பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!