கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!
திருமணத் தடை நீங்குவதாகக் கூறி பரிகாரம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோவை ஜோதிடர் மீது பகீர் புகார்
திருப்பூரைச் சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுக்கு நீண்ட நாட்களாக அவரது பெற்றோர் திருமண வரன் தேடி வந்துள்ளனர். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதுடன், ஜோதிடர்களிடமும் ஜாதகம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து வரன் அமையாததால் அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரை அந்தப் பெண் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். தனது ஜாதகத்தைப் பார்த்த அந்த ஜோதிடர், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், அதற்காக சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்ய வேண்டும் என்றும் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய அந்தப் பெண்ணை, பரிகாரம் செய்வதாகக் கூறி ஜோதிடர் பலமுறை தனியாக அழைத்துச் சந்தித்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி தன்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் விடிய விடிய வேட்டை... கல்லூரி மாணவர்கள் அறையில் சிக்கிய பயங்கர பொருட்கள்... திகைத்துப்போன போலீஸ்...!
இதற்கிடையில், கடன் பிரச்சினை இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றதாகவும், தனது உறவினர் விபத்தில் சிக்கியிருப்பதாகக் கூறி ரூ.1.50 லட்சம் வாங்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு, திடீரென தன்னுடன் பேசுவதை ஜோதிடர் நிறுத்திவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவர் விசாரித்தபோது, ஜோதிடருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஜோதிடர் ஏமாற்றியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து தன்னிடம் தொல்லை கொடுத்தால், தனக்கு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளராக இருப்பதாகவும், அவரிடம் கூறி தன்னை தொலைத்துவிடுவேன் என்றும் ஜோதிடர் மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது திருமண ஆசையையும், நம்பிக்கையையும் பயன்படுத்தி தன்னை ஏமாற்றியதுடன், பாலியல் ரீதியாக துன்புறுத்தி பணத்தையும் பெற்றுக்கொண்டதாக கூறியுள்ள அந்தப் பெண், சம்பந்தப்பட்ட ஜோதிடர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகார் மனுவின் நகல்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்தடை நீங்க பரிகாரம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கோவை ஜோதிடர் மீது இளம்பெண் அளித்துள்ள இந்தப் புகார், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே அதிரடி... கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்குள் புகுந்த காவல்துறை... காரணம் என்ன?