×
 

பொண்ணுங்க மேல இனி யாராச்சு கை வைங்க பாப்போம்..!! கோவையில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய 'சிங்கப்பெண்கள்' ஸ்குவாட்..!!

கோவையில் பொது இடங்களில் நேரடியாகக் களமிறங்கிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அதிரடி ஆக்‌ஷனில் ஈடுபட்டு உள்ளனர் சிங்கப்பெண்கள்.

கோவை மாநகரில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மாநகரக் காவல் ஆணையரின் நேரடி உத்தரவின் பேரில் ‘சிங்கப்பெண்கள்’ என்ற சிறப்புப் படை உருவாக்கப்பட்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பெண் போலீசார் மட்டுமே அடங்கிய இந்தப் படை, நகரின் பரபரப்பான பகுதிகளில் நேரடியாக மக்களுடன் தொடர்புகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சமீபகாலமாக எதிர்க்கட்சியினர் கோவையின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலடியாகவும், நகரவாசிகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இந்தச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்துவது இலக்காகும்.

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ‘சிங்கப்பெண்கள்’ படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டம் நிறைந்த பேருந்துகளுக்குள் நேரடியாக ஏறி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், அலுவலகங்களுக்குச் செல்லும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் உரையாடி, அவர்களது பாதுகாப்பு குறித்த கருத்துகளைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

“பயணத்தின்போது ஏதேனும் அச்சுறுத்தல் அல்லது தொல்லை ஏற்பட்டால் அஞ்சாமல் உடனடியாக காவல் துறையின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” என தைரியம் ஊட்டினர். மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு செயலியான ‘காவலன் SOS’ஐ பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தினர். இந்த செயலி மூலம் அவசர நிலையில் தங்கள் இருப்பிடத்தை உடனடியாகப் பகிர்ந்து உதவி கோர முடியும் என்பதை விரிவாக விளக்கினர்.

மாலை வேளைகளில் உக்கடம் பெரியகுளம் அருகிலுள்ள ‘ஐ லவ் யூ கோயமுத்தூர்’ செல்பி ஸ்பாட், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்தப் படையினர் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் வரும் பெற்றோர்களிடம் தனிப்பட்ட முறையில் உரையாடி, தற்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் போதைப்பொருள் (டிரக்ஸ்) கலாச்சாரம், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள், சந்தேகத்துக்குரிய சூழல்களில் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘சிங்கப்பெண்கள்’ படையின் செயல்பாடுகள் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பெண்கள் தன்னம்பிக்கையுடன் வெளியில் செல்லும் சூழலை உருவாக்க இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் உறுதியளித்துள்ளன.

இந்த நடவடிக்கை கோவை போன்ற பெருநகரங்களில் பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share