கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழ் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநில வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று எளிய விவசாயிகளை அம்மாநில வனத்துறையினர் ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இப்படுகொலை குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் அப்பகுதி வனப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்ப்பதைத் தங்களது வழக்கமான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வனப்பகுதிக்குள் காணாமல் போன தங்களது மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான் மற்றும் குமார் ஆகிய மூன்று அப்பாவி விவசாயிகளை கர்நாடக மாநில வனத்துறையினர் கொடூரமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இக்கொடூரச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தாங்கள் செய்த இந்த அப்பட்டமான கொலைக் குற்றத்தைத் திசைதிருப்புவதற்காக, கொல்லப்பட்ட விவசாயிகள் வேட்டையாட வந்ததாக வனத்துறையினர் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி நாடகமாடுகின்றனர் என அறிக்கையில் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!
மேலும், எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இப்படுகொலையில் ஈடுபட்ட கர்நாடக வனத்துறையினரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இக்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது கடுமையான கண்டனத்தை உடனடியாக கர்நாடக அரசுக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!