மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்துள்ள சிபிஐ, மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்க நினைக்கும் அதிகார வர்க்க அணுகுமுறையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க. சந்தானம் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன், வை. செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சமூகப் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்க பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க அரசு பிறப்பித்துள்ள உத்தரவு கூட்டத்தில் ஏகமனதாகக் கண்டிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் போராடும் உரிமையை எந்தவொரு அரசும் பறிக்க முடியாது எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை உள்ள நிலையில், அவர்களின் அரசியல் வெளிப்பாட்டைத் தடுப்பது கல்வி வளாகங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டிக்கும் பிற்போக்குத்தனமான செயல் என விமர்சிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டம் முதல் அனைத்துச் சமூக மாற்றங்களிலும் மாணவர்களே முன்னணியில் இருந்துள்ளனர் என்பதை நினைவுபடுத்திய நிர்வாகிகள், மாணவர்களின் அரசியல் உணர்வைக் குற்றமாகக் கருதுவது ஆபத்தானது என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்!
மேலும், மாற்றுக் கருத்துகளைத் திசைதிருப்பும் போக்குகள் தீவிரமடைந்து வரும் சூழலில், அரசியலமைப்புச் சட்ட மாண்புகளையும் சமூகநீதியையும் கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, தமிழகக் கல்லூரிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள மாணவர் பேரவைத் தேர்தல்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்தி ஜனநாயகச் சூழலை மீட்டெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!