கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் கடுமையான விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு. வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு. வெங்கடேஷ் வேம்புலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மு. கண்ணகி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, லி. உதயகுமார், இரா. திருமலை, பா. தினேஷ், க. இப்ராஹிம் மற்றும் மாணவர் மன்ற நிர்வாகிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சாமானிய மக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட சர்க்கரை தற்போது ரூ.70 வரை எகிறியுள்ளது.
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையால், சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் தயாரிப்பிற்குத் திருப்பிவிடப்பட்டு சர்க்கரை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் ஏற்கெனவே டீ, காபி விலை உயர்ந்த நிலையில், சர்க்கரை விலையேற்றத்தால் மீண்டும் டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், பயிர் சேதங்களால் பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கும், இட்லி அரிசி ரூ.35-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.150-க்கும், கடலைப் பருப்பு ரூ.100-க்கும், தனியா ரூ.250-க்கும் விற்பனையாகி ஏழை, எளிய நடுத்தர மக்களின் பட்ஜெட்டைச் சுக்குநூறாக்கியுள்ளதாகச் சாடிய அவர், அரிசி, கரும்பு போன்ற உணவுப் பொருட்களை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்; ஆன்லைன் உணவு வர்த்தகத்தையும், கள்ளச்சந்தை பதுக்கலையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையிலும், ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாகவும் வழங்கிட வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் பொறுப்புள்ள ஒன்றிய அரசு, தன் கடமையை உணர்ந்து உடனடியாகச் செயல்பட வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!