தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!
துணிச்சலுடன் புகார் அளிக்கின்றதால்தான் வன்கொடுமை சட்டத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன என உள்துறை செய்லர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார்ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் மற்றும் டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை அவர்கள் புள்ளிவிவரங்களுடன் விளக்கினர்.
2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,461 ஆகக் குறைந்துள்ளது" என உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்துச் சில மாதங்களாக ஊடகங்களில் உண்மைக்கு மாறான சித்திரம் உருவாக்கப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!
பாலியல் வன்கொடுமை வழக்குகளைப் பொறுத்தவரை, 2021-ல் 422 ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2025-ல் 401 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்துக் குற்றங்களின் விகிதமும் சரிந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவாவது குறித்து விளக்கம் அளித்த டிஜிபி வெங்கட்ராமன், "பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, பாதிக்கப்படுவோர் இப்போது தைரியமாகப் புகாரளிக்க முன்வருகின்றனர். புகார்கள் அதிகரிப்பது விழிப்புணர்வையே காட்டுகிறது" என்றார்.
சிறிய குற்றங்கள் என்றாலும் பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைக் கண்டறியத் தொழில்நுட்ப ரீதியான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி உறுதி அளித்தார்.
நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி மார்ச் 15-ல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரசின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!