சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைப்பேன்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் சூளுரை!
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று (மார்ச் 1, 2026) தனது 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் உரிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக ஒப்படைப்பேன் என உணர்ச்சிகரமான சூளுரை மேற்கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தனது பிறந்தநாளை ஒட்டித் தமிழக மக்களுக்காக அவர் விடுத்துள்ள உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை வெளியிட்டுள்ளார்.
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன் என்று முதல்வர் தெரிவித்தார். திராவிட வரலாற்றில் ஒரு சிறுதொண்டனாகத் தொடங்கி, இன்று பெருந்தொண்டாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நமது #DravidianModel ஆட்சியின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது. உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன் என முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது. சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி என அவர் சூளுரைத்தார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய பாதையில், தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும் என்ற போர்க்குணத்தோடு தொடர்ந்து பயணிக்கப் போவதாக அவர் உறுதி பூண்டார்.
மெரினா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின், முதல்வர் ஸ்டாலின் அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, முதல்வரின் இந்தப் பேச்சு தொண்டர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!