காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கார்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் நடைபெற்ற பின்னர் கூட்டம் முடிவடைந்ததும், இரு தலைவர்களும் தனித்தனியாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். பின்னர் அவரவர் அலுவலகங்களுக்குச் சென்று கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் செல்லத் தயாரானார். கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்த அவர், அருகில் இருந்த உதயநிதி ஸ்டாலினின் காரைத் தனது கார் எனத் தவறுதலாக நினைத்து ஏற முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு, “சார், நமது கார் முன்னால் நின்றுள்ளது. இது உங்களுடையது அல்ல” எனத் தெரிவித்தனர். சூழ்நிலையை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி “ஓ… சாரி” எனக் கூறி, தனது காரை நோக்கிச் சென்று ஏறி வீட்டுக்குப் புறப்பட்டார்.
இரு கார்களும் ஒரே நிறத்திலும் ஒத்த மாடலிலும் இருந்ததால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதேபோன்ற சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போதும் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். அதற்கு முன்னர் உதயநிதியும் எடப்பாடியின் காரில் ஏற முயன்று, காரில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்து சுதாரித்துக் கொண்டார். அந்தச் சம்பவத்தைப் பின்னர் சட்டப்பேரவையில் உதயநிதி நகைச்சுவையாகக் குறிப்பிட்டபோது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டம்.. உட்கட்சி பிரச்சினையை சமாளிக்க இபிஎஸ் ஆயத்தம்..!!
இன்று நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ஏற்படும் இத்தகைய எளிய தவறுகள் அரசியல் தலைவர்களையும் தவிர்க்க முடியாதவை என்பதை இது மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!