விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!
தமிழகத்தில் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 40% நிதியை, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, விவசாயிகளுக்கான மத்திய அரசு நிதியைச் சரியாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக அவர் தெரிவித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு 40 சதவீத நிதியை ஆண்டுதோறும் வழங்குகிறது. எஞ்சிய 60 சதவீத நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்து திட்டத்தை முடிக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்றாண்டுகளாகத் திமுக அரசு தனது பங்கை ஒதுக்காமல், மத்திய அரசு தந்த நிதியையும் திருப்பி அனுப்பி விவசாயிகளுக்குப் பெரும் துரோகத்தை இழைத்துள்ளது" என அவர் சாடினார்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாகத் தமிழகம் இன்று மாறியுள்ளது. திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ₹1.30 லட்சம் கடனைச் சுமத்தியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை விட, தற்போது இரு மடங்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசின் தனி வரியில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திமுக - தேமுதிக கூட்டணி மக்களின் மனநிலைக்கு எதிரானது திருச்சியில் ஜி.கே.வாசன் கடும் விமர்சனம்!
ஐந்தாண்டு கால ஆட்சியில் கொடுத்த எந்தவொரு முக்கிய வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. தங்களது நிர்வாகத் தவறுகளை மறைப்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து தேர்தல் முகவர் கூட்டங்களை நடத்தி மக்களைத் திசை திருப்புகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு வழங்கிய ₹5,000 சிறப்பு நிதியை 'வாக்காளர்களை ஏமாற்றும் முயற்சி' என ஜி.கே.வாசன் விமர்சித்திருந்த நிலையில், தற்போது விவசாய நிதி தொடர்பாக அவர் எழுப்பியுள்ள இந்தப் புகார் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!