நாங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்! எச். ராஜாவுக்கு நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் எச்.ராஜா ஆஜராக வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளன. இவை இரண்டும் பக்தர்களால் வழிபடப்படும் புனிதத் தலங்களாகும். 2025 பிப்ரவரியில், தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள், குறிப்பாக இந்து முன்னணி, எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தச் சூழலில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலைக்கு வந்தபோது, சிலர் மலையில் அசைவ உணவு சாப்பிட்டதாகவும், அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் கூறப்படுகிறது. இது மலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகக் கருதி, இந்து முன்னணி மதுரை பழங்காநாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அறிவித்தது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு.. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பகீர் குற்றச்சாட்டு..!
ஆனால், காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இந்து முன்னணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நிபந்தனைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எச். ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும். அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது, தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம்,துணை முதல்வர் உதயநிதி கிறிஸ்தவர், திமுக அரசு இந்து விரோத அரசு, ராமர் கோயிலைப் போல தர்காவை மாற்றிவிடுங்கள் உள்ளிட்ட கருத்துக்களை கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக எச் ராஜா மீது சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறை தரப்பில் எச். ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணை நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எச். ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எச் ராஜா காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும்., காவல்துறை விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் எச். ராஜா மனதை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி கூறினார்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையிலான வேலை..! அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!!