கடைகளின் பெயர்களை தமிழில் மாற்றுக! உயர்நீதிமன்ற உத்தரவை அரசு உடனே செயல்படுத்த சீமான் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிலுள்ள கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகளை வரும் நவம்பர் முதல் நாளுக்குள் தமிழில் மாற்ற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைத் தமிழ்நாடு அரசு சிறிதும் காலதாமதமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பெயருக்குத்தான் இது தமிழ்நாடு ஆனால் நடைமுறையில் தமிழுக்கும் தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியுள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மிகக் காட்டமாக அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றக் காலக்கெடு விதித்துத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிலவும் சூழல் குறித்து வேதனை தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் எங்குமே தமிழ் இல்லை என்ற அவல நிலையே நிலவுகிறது. தமிழர் நாவிலும் வாழ்விலும் தமிழுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
உணவகம், தேநீர்க்கடை, தங்கும் விடுதி, வங்கி, நகைக்கடை, மருந்தகம் எனத் தூய தமிழில் எழுதப்பட வேண்டிய பெயர்கள் அனைத்தும் ஹோட்டல், டீ ஷாப், லாட்ஜ், பேங்க், ஜுவல்லரி, மெடிக்கல்ஸ் என ஆங்கில மயமாகிவிட்டன. மொத்த, சில்லறை விற்பனையகம் அல்லது பழுது நீக்ககம் என்ற சொற்களைக் காண்பதே அரிதாகி, லெமன் சாதம், மீல்ஸ் என்று வணிகப் பலகைகளில் நாள்தோறும் மொழிப்படுகொலை அரங்கேறி வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
தொடர்ந்து மொழிப் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டவும் பொதுவெளியில் தமிழுக்கு முதன்மை பெற்றுத்தரவும் மருத்துவர் ராமதாஸ், அண்ணன் தொல். திருமாவளவன் ஆகியோருடன் இணைந்து தொடங்கிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே பல கட்டப் போராட்டங்களை நடத்தினோம். மக்கள் இயக்கங்கள் அன்றே வலியுறுத்திய இந்த எளிய உரிமையை, இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து உத்தரவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடி 75 ஆண்டுகள் கடந்தும் அந்த இழிநிலை தொடர்கிறது. மொழிப்போர் தியாகிகளின் ஈகத்தால் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்துவிட்டனர் என்று கடுமையாக விமர்சித்தார்.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றித் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் சூழலில், தமிழ்நாட்டில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அன்னைத் தமிழ் மொழியை வழிபாட்டு மொழியாகவும், வழக்காட்டு மொழியாகவும், வணிக நிறுவனங்களின் முதன்மைப் பெயராகவும் நிலைநிறுத்த உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தவெக அரசு உடனடியாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!