×
 

கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கோவில்களில் செல்போனுக்கு முழுமையான தடை விதிக்காமல் மூலஸ்தானத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் முக்கிய 52 திருக்கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிப்பதற்குப் பதிலாக, மூலஸ்தானத்தில் மட்டும் தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 52 புகழ்பெற்ற முதுநிலை இந்து திருக்கோயில்களில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) முதல் கேமரா வசதியுள்ள செல்போன்களைப் பக்தர்கள் கொண்டு செல்ல முழுமையான தடை அமலுக்கு வந்துள்ளது. செல்போன்களைப் பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கத் தலா ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இம்முடிவு குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், திருக்கோயில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

இதையும் படிங்க: பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

ஆனால், பக்தர்களின் அன்றாட அடிப்படைத் தேவையாக மாறிவிட்ட செல்போன்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வது கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்குத் தேவையற்ற நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கோயில்களின் பாரம்பரிய அமைப்பையும் பக்தர்களின் சூழலையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், நமது இந்து திருக்கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட வளாகங்களைக் கொண்டவை. கோயில்களில் சாமி தரிசனம் முடிந்த பின்னர் அங்குள்ள பிரகாரங்கள், மண்டபங்களில் குடும்பத்தினருடன் அமர்ந்து உரையாடுவதும், பிரசாதங்களை உண்பதும் பொதுமக்களின் நீண்டகால வழக்கமாகும். 

கோயிலுக்கு குடும்பமாக, உறவினர்களுடன் அல்லது நண்பர்களாகக் குழுவாக வருபவர்கள் கூட்ட நெரிசலில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால், அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் மிக மிக அத்தியாவசியமான சாதனமாகும். குறிப்பாக முதியவர்களுடன் வருபவர்களுக்கு இத்தடை பெரும் அலைச்சலையும் துயரத்தையும் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோயில்களின் கலைநயமிக்க சிற்பங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக் கலை அம்சங்கள் ஆகியவற்றின் முன்பாக நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வது அவர்களின் வாழ்நாள் நினைவாக அமையும். அதேபோல் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிரும்போது நமது பாரம்பர்யக் கலை அம்சங்களையும், திருக்கோயில்களின் ஆன்மிகச் சிறப்புகளையும் உலகெங்கும் உள்ள மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். 

ஆனால், செல்போன் கொண்டு செல்லவே ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதால் இவை அனைத்தும் முடக்கப்படுகின்றன. எனவே, கோயில்களில் செல்போனுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது, மூலஸ்தானப் பகுதியை மட்டும் புகைப்படம் எடுக்கக் கூடாது எனக் கட்டுப்படுத்துவது போன்ற நெறிமுறைகளை அமல்படுத்தலாம். இதை விடுத்து முழுத்தடை விதிப்பது பக்தர்களுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், அறநிலையத்துறை தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share