×
 

டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 'இ - 85' எனப்படும், 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் வினியோகிக்கும் நாட்டின் முதல் நிலையத்தை டெல்லியில் துவக்கி வைத்தார். 'இ - 85' பெட்ரோலின் விலை லிட்டர், 82 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டெல்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நாட்டின் முதல் ‘இ-85’ எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய எரிபொருள், பெட்ரோலில் 85 சதவீதம் எத்தனால் கலந்தது ஆகும். இதன் விலை லிட்டருக்கு 82 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய எத்தனால் கலப்புத் திட்டத்தின் கீழ் தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனால் கரும்பு பாகு கழிவு, சோளம், அரிசி மற்றும் சேதமடைந்த தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 

இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவாகும் அந்நிய செலாவணியை பெருமளவு குறைக்க முடியும் என அரசு நம்புகிறது. மேலும், எத்தனால் கலப்பு எரிபொருள் சுற்றுச்சூழல் மாசையும் கணிசமாகக் குறைக்கும் திறன் கொண்டது.

இதையும் படிங்க: தினமும் 2 மணி நேரம் மின்தடை! சுழற்சி முறையில் பவர்கட்! சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் அவதி!

இந்நிலையில், எத்தனால் கலப்பை 85 சதவீதம் வரை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்றவாறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. 

ஹீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்கனவே ‘இ-85’ பெட்ரோலில் இயங்கும் பைக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனமும் ‘இ-85’க்கு ஏற்ற ‘வேகன் ஆர்’ காரை விரைவில் சந்தைக்கு கொண்டு வர உள்ளது.

டெல்லியில் பூசா சாலை, பழைய ராஜிந்தர் நகர் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் முதல் ‘இ-85’ விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. டெல்லியில் சாதாரண பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.12 ரூபாயாக உள்ள நிலையில், ‘இ-85’ பெட்ரோல் 20 ரூபாய் குறைவாக விற்கப்படுவது மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ‘இ-85’ விற்பனை இயந்திரங்களை படிப்படியாக நிறுவும் பணியை வேகப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், எரிபொருள் செலவு குறையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சி இந்தியாவின் எரிசக்தி துறையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share