“விதி திரைப்பட சுஜாதாவே எனக்கு உந்துதல்!” - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நெகிழ்ச்சி!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா அவர்கள் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதையொட்டி, அவருக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றப் பிரிவு உபசார விழாவில், தனது வழக்கறிஞர் பயணத்திற்கு ‘விதி’ திரைப்படமே அடித்தளம் என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்த நீதிபதி மஞ்சுளா, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) பணி ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு உயர் நீதிமன்ற வளாகத்தில் அவருக்குப் பிரம்மாண்டப் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
நீதிபதி மஞ்சுளாவுக்குப் பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "நீதிபதி மஞ்சுளா பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காகப் பெண் சிங்கமாகப் போராடியவர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவர் 28,934 வழக்குகளில் தீர்ப்பளித்துச் சாதனை படைத்துள்ளார். மேலும், உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முதலாகத் தனக்காக ஒரு பெண் தபேதாரை நியமித்துக் கொண்டவர் இவர்தான்" எனப் பாராட்டிப் பேசினார்.
இதையும் படிங்க: பள்ளிக்கரணையில் கட்டுமானம் கட்ட தடை நீக்கம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிரிவு உபசாரத்தை ஏற்றுப் பேசிய நீதிபதி மஞ்சுளா தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
சட்டத்தை நான் தேர்ந்தெடுத்தேனா அல்லது சட்டம் என்னை தேர்ந்தெடுத்ததா என்ற வியப்பு எனக்குள் எப்போதும் உண்டு.இளங்கலை அறிவியல் (B.Sc) முடித்த பிறகு, முதுகலை படிப்பிற்கு இடம் கிடைத்தும் அதைத் தவிர்த்துவிட்டுச் சட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு முக்கியக் காரணம் 'விதி' திரைப்படம். அதில் நடிகை சுஜாதா ஏற்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டே நான் சட்டம் பயின்றேன்.
நீதிபதியாக இருப்பது எளிதான காரியம் அல்ல. பல ராஜ்யங்கள் வீழலாம், ஆனால் நீதிமன்றங்கள் நீடித்து நிலைக்கும். இந்த நிரந்தரமான நீதிமன்றங்களின் தற்காலிக நிர்வாகிகளே நீதிபதிகள். எனவே, பணி ஓய்வு என்பதும் கூட ஒரு தற்காலிகமான ஒன்றுதான் என அவர் தத்துவார்த்தமாகத் தெரிவித்தார்.
நீதிபதி மஞ்சுளாவின் ஓய்வைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 52 ஆகக் குறைகிறது. அதேசமயம், காலியிடங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகப் பெண் நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் என்றப் பெருமையைப் பெற்றுள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஒரு சிறந்த பெண் நீதிபதியை இன்று வழியனுப்பி வைத்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!