×
 

தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

இங்கிருந்து உடனடியாகக் கிளம்புமாறு அதட்டிய அவர், “ஒழுங்கா கிளம்பு… இல்லைன்னா கன்னத்தில் அறைந்துவிடுவேன்” என மிரட்டினார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்கு வகித்த ஜென்-இசட் இளைஞர் வாக்குகள், இன்று அதே அரசின் கீழ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன. பழைய அரசியல், அடக்குமுறை வேண்டாம் என்ற முழக்கத்தோடு விஜய்க்கு வாக்களித்த இளைய தலைமுறை, தஞ்சாவூரில் நடந்த சமீபத்திய சம்பவத்தில் காவல்துறையின் அணுகுமுறையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 17, 2026 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் ரயில் நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்சி பதாகை அகற்றப்பட்டதை எதிர்த்து சுமார் 40 பேர் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது விளார் பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை தொழிலாளி ஆகாஷ் (26) இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் செல்ல முயன்றார். 

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழியை விடுங்கள்; மறியலைக் கலைத்து போக்குவரத்தைச் சீரமைப்பது காவல்துறையின் கடமைதானே என்று எளிய கேள்வியை எழுப்பினார். விசிகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) அப்துல் ரஹீம் தலையிட்டார். இங்கிருந்து உடனடியாகக் கிளம்புமாறு அதட்டிய அவர், “ஒழுங்கா கிளம்பு… இல்லைன்னா கன்னத்தில் அறைந்துவிடுவேன்” என மிரட்டினார். 

இதையும் படிங்க: பெயரை மாற்றினாலும் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் அழியாது...தவெக அரசை சாடிய ஆர்.எஸ்.பாரதி!

ஆத்திரமடைந்த ஆகாஷ் “முடிந்தால் அடித்துப் பாருங்கள்” என பதிலளித்தார். உடனே அதிகாரி அவரைக் கன்னத்தில் அறைந்தார். அடுத்த நொடியே ஆகாஷ் பதிலுக்கு அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கேமராக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் அவரைச் சூழ்ந்து, கழுத்தில் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். ஆகாஷ் மீது அரசு ஊழியரைத் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 

காவல்துறை அறிக்கையில், குறைந்தபட்ச பலப்பிரயோகமே பயன்படுத்தப்பட்டதாகவும், மோதலைத் தடுக்கவே தலையிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், சாலை மறியல் செய்தவர்கள் மீது மென்மையான போக்கும், பாதிக்கப்பட்ட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கையும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சுயமரியாதையை முதன்மையாகக் கருதும் ஜென்-இசட் தலைமுறை இத்தகைய அதிகார பலப்பிரயோகத்தை சகிக்காது. உள்துறை இலாகாவை நேரடியாகக் கையாளும் முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தத் தெளிவான விளக்கத்தையும் அறிவிக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மௌனம் காக்கிறார். நேர்மை, அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி எனப் பேசி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இச்சம்பவம் வெறும் தனிநபர் மோதல் அல்ல. ஆட்சியாளர்கள் காவல்துறையை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதற்கான சான்று. அதிகார மிரட்டல்களுக்கு எதிராக உடனடித் தலையீடு இல்லையெனில், தவெகவின் அடித்தளமான இளைஞர் சக்தியின் நம்பிக்கை சரியத் தொடங்கும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: பவர் கட் முதல் சட்டம் - ஒழுங்கு வரை.. 100 நாட்களில் விஜய் ஆட்சியின் முக்கிய சொதப்பல்கள்!! லிஸ்ட் இதோ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share