×
 

நள்ளிரவில் நடந்த பயங்கரம்... போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்...அடகு கடையில் 80 சவரன் நகைகள் கொள்ளை...!

நகை அடகு கடையில் நள்ளிரவில் கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகை அடகு கடையின் வெளிப்புற இரும்பு கேட்டை உடைத்து 80 சவரன் தங்க நகை கொள்ளை - கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை. தியாகதுருகம் காவல் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நகை அடகு கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரேமா நகை அடகு கடையை ராமச்சந்திரன் என்பவர் நடத்தி வருகின்றார். 

இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது நகை அடகு கடையில் முன்பக்க இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக உடனடியாக தியாகதுருகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையிலான போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் சுமார் 12.30 மணியளவில் ஒரு  பெண் உட்பட மூன்று பேர் முகமூடி அணிந்து கொண்டு நகை அடகு கடைக்கு வந்து கடையின் முன்புறம் உள்ள சிசிடிவி கேமராவை திருப்பிவிட்டு நகை அடகு கடையின் வெளியே இருந்த இரும்பு கேட்டை உடைத்து கடைக்குள் சென்று கடையில் இருந்த பீரோவை கேஸ் வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டு அறுத்து பீரோவில் இருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தொடர்ந்து நகை அடகு கடையில் உள்ள அடகு வைத்த விபரங்களின் அடிப்படையில் நகை அடகு கடையில் கொள்ளை போன நகைகளை காவல்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற பின் சரியாக எவ்வளவு நகை கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் அன்பரசு தலைமையிலான கைரேகை நிபுணர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக மோப்பநாய் சென்று அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தியாகதுருகம் காவல் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த நகை அடகு கடை அமைந்துள்ள நிலையில் இந்த நகை அடகு கடையில் நள்ளிரவில் கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: வீரியமெடுத்த ஹார்ட் டிஸ்க் திருட்டு... சிபிசிஐடி வசம் சென்ற விவகாரம்..! கிடுக்கிப்பிடி விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share