கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!
கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயம், ரயில்வே டிராக்கில் கல்லூரி பேருந்து சிக்கிய நிலையில் ஜல்லி ஏற்றி சென்ற சரக்கு ரயில் மோதி விபத்து.
கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் இன்று மாலை தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்திலிருந்து மாணவர்கள் சில நொடிகளுக்கு முன் இறங்கியதாலும், ரயில் வேகம் குறைவாக இருந்ததாலும் ஒரு மாபெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கரூரிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வெள்ளியணை நோக்கிச் சென்ற தனியார் கல்லூரி பேருந்து, ஆளில்லா ரயில்வே கேட் பகுதியைத் தாண்டி தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாகப் பேருந்து தண்டவாளத்தின் நடுவிலேயே பழுதாகி நின்றது.
அதே நேரத்தில், அந்தத் தண்டவாளத்தில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. பேருந்து தண்டவாளத்தில் சிக்கியிருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் அவசர கால பிரேக்கை (Emergency Brake) பயன்படுத்தினார். இருப்பினும், கட்டுப்பாட்டை மீறிய ரயில் கல்லூரி பேருந்தின் பக்கவாட்டில் பலமாக மோதியது.
இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!
இந்த மோதலில் பேருந்தின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்திற்குள் இருந்த சுமார் 18 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில் வருவதைக் கண்டதும் ஓட்டுநர் மற்றும் சில மாணவர்கள் பேருந்திலிருந்து கீழே குதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஜல்லி ஏற்றி வந்த ரயில் என்பதால் அதன் வேகம் குறைவாக இருந்ததும் மாணவர்களின் உயிர் பிழைக்க ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளில்லா ரயில்வே கேட்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!