10 மாதம் தலைமறைவு... தட்டித் தூக்கிய போலீஸ்...!! கதறி அழுத சுர்ஜித்தின் தாய்..!!
நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி கைதானதும் கதறி அழுதார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் என்பவர், கே.டி.சி. நகரில் பகல்நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, அவர் ஒரு வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் கொண்டிருந்த காதல் உறவு. இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயார் மற்றும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியின் சம்பந்தம் பற்றிய குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவின் தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, சுர்ஜித் என்பவர் அவரைத் தனியாக அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சுர்ஜித் சம்பவத்துக்குப் பிறகு சரணடைந்தார். கவினின் குடும்பத்தினர் இதைச் சாதி அடிப்படையிலான படுகொலை என்று வலியுறுத்தினர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் (உதவி ஆய்வாளர்) மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
சுர்ஜித்தின் தாயாரான கிருஷ்ணகுமாரியும் உதவி ஆய்வாளர் தான். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆரம்பம் முதலே இருந்தன. கொலைக்கு முன்னரும் பின்னரும் குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாடு இருந்திருக்கலாம் எனக் கவினின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். கிருஷ்ணகுமாரியும் அவரது கணவரும் காவல்துறையில் பணியாற்றியதால், விசாரணை தாமதமாகிறது அல்லது பாதுகாக்கப்படுகிறது எனப் புகார்கள் எழுந்தன. இதனால் அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!
குற்றப்பத்திரிகையில் கிருஷ்ணகுமாரியின் பெயர் இரண்டாவது குற்றவாளியாக இடம்பெற்றிருந்தது. நீதிமன்றம் அவரது கைதுக்கு உத்தரவிட்டிருந்த நிலையிலும், அவர் சில காலம் தலைமறைவாக இருந்தார். இன்று அவர் கைதாகினார். அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், மகனை பறிகொடுத்த தாயும் இப்படி தானே வேதனையை அனுபவித்து இருப்பார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!