ராஜஸ்தானில் வெளிநாட்டு மொழிக் கல்வி விரிவாக்கம்..!! மத்திய அரசின் கல்வித்துறை முயற்சி..!!
ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மத்திய கல்வித்துறைக்கு உட்பட்ட ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் (EFLU) உடன் ராஜஸ்தான் மாநில கல்வித்துறை இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்த முதற்கட்ட திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 1,000 மாணவ மாணவிகளுக்கு பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐந்து முக்கிய வெளிநாட்டு மொழிகள் இலவசமாகவும் தொழில்நுட்ப உதவியுடனும் கற்பிக்கப்பட உள்ளன.
இந்த ஒப்பந்தம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினார். “மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடன் இணைவதற்கும் உள்ள சக்திவாய்ந்த கருவி” என்று அவர் கூறினார்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் தற்போது இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். “நமது இளைஞர்கள் இந்த மொழிகளைக் கற்றுக்கொண்டால், தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமின்றி, சர்வதேச வர்த்தகம், சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் பிற தொழில் துறைகளிலும் உயர் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்” என்றார்.
இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் (European Union) இந்தியா கொண்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மூலம், வெளிநாட்டு மொழித் திறன் கொண்ட இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உருவாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த மொழிக் கல்வி திட்டம், ராஜஸ்தான் இளைஞர்களை உலக அரங்கில் போட்டியிடும் வகையில் தயார்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் கூடிய மொழி ஆய்வகங்கள் (Language Labs) மூலம் பயிற்றுவிக்க உதவும். ராஜஸ்தான் அரசின் கல்வித் திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அடிப்படையில் மாணவர்களின் பன்மொழித் திறனை வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், ராஜஸ்தானில் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமையும். உலகமயமாக்கல் சூழலில், மொழித் திறன் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என்று கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!