மதுரை AIIMS..! வெளி நோயாளிகள் பிரிவு எப்போது செயல்படும்.? நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!!
2027, ஜனவரி ஒன்றாம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு மத்திய அரசின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மருத்துவமனையின் முதற்கட்ட சேவைகள் விரைவில் மக்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
சுமார் 2,021 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனை தென் தமிழக மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்படுகிறது. முதற்கட்டத்தில் மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட முழுமையான மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்படும்.இந்த கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிலவரப்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 57 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் முதற்கட்டப் பணிகள் விரைவில் நிறைவடைந்து வெளி நோயாளிகள் பிரிவு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. நீதிமன்றம் ஒரு மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என நேரடி உத்தரவிட இயலாது என்றும் குறிப்பிட்டது. அதே சமயம் மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது.இந்த அறிவிப்பு மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?
தற்போது மதுரை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு திறக்கப்படுவது பெரும் நிவாரணமாக அமையும். சிறப்பு மருத்துவ சேவைகள், மேம்பட்ட ஆய்வக வசதிகள் மற்றும் நிபுணர் மருத்துவர்கள் இங்கு கிடைக்கும் என்பதால் தென் தமிழக மக்கள் பெரிதும் பயனடைவர்.முதற்கட்டமாக வெளி நோயாளிகள் பிரிவு செயல்படத் தொடங்கிய பிறகு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்படியாக இங்கு மாற்றப்படுவார்கள். பின்னர் முழுமையான மருத்துவமனை கட்டடங்கள் நிறைவடைந்ததும் உள் நோயாளிகள் பிரிவும் செயல்படத் தொடங்கும். ஒட்டுமொத்த திட்டமும் முடிவடைந்ததும் 900 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக இது செயல்படும். இதில் தொற்று நோய்களுக்கான தனி பிரிவும் இடம்பெறும்.கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு அளித்த உத்தரவாதம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவை திட்டத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன. ஜனவரி 1 ஆம் தேதி முதல் வெளி நோயாளிகள் பிரிவு செயல்படத் தொடங்கும் என்ற அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் தள்ளுமுள்ளு நடந்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்...!