×
 

மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் தள்ளுமுள்ளு நடந்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்...!

முதலில் காலை 10 மணிக்குப் பொதுமக்களை அனுமதிப்பது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில பகுதிகளில் பொதுமக்களின் நெருக்கடி அதிகமாக இருந்ததால், காலை 8.30 மணி முதலே படிப்படியாக அவர்களை உள்ளே அனுமதிக்கத் தொடங்கினோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பக்தர்கள் தடுப்புகளை தாண்டி ஏறி குதித்துச் சென்றதாலும், வரிசையில் முண்டியடித்ததாலும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசியதாவது:  எதிர்பார்த்தபடியே, கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி மேலே நடைபெற்ற அனைத்து விழாக்கள் மற்றும் பூஜைகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது கீழே உள்ள சன்னதிகளில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஒரு சில இடங்களில் பொதுமக்கள் முன்கூட்டியே வந்து குவிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியை பிற்பகல் ஒரு மணிக்குள் குறைத்து, பொதுமக்களை படிப்படியாக அனுமதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

கீழே உள்ள சன்னதிகளில் காலை 10 மணி வரை பூஜைகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் பொதுமக்களுக்கு தரிசனம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விஷயம் தெரியாமல் ஒரு சிலர் முன்கூட்டியே வந்திருந்தனர். அவர்களுக்கும் நிலைமை குறித்து விளக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடியே நடைபெற்று வருகின்றன. காலை 8 மணியளவில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் நெருக்கடி அதிகமாக இருந்தது. முதலில் காலை 10 மணிக்குப் பிறகு பொதுமக்களை அனுமதிப்பது என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதலே படிப்படியாக பொதுமக்களை உள்ளே அனுமதிக்கத் தொடங்கினோம்.

ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களை உள்ளே அனுமதித்து, அவர்கள் தரிசனம் முடித்த பிறகு வெளியே அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை எந்தவிதமான பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது பொதுமக்களின் தரிசனம் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில் காவல்துறை திட்டமிட்டுள்ளபடி பொதுமக்கள் அனைவரையும் படிப்படியாக உள்ளே அனுமதித்து தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுவரை எத்தனை பேர் வந்துள்ளனர் என்பது குறித்து தற்போது கணக்கிடப்படவில்லை. தரிசனம் நிறைவடைந்த பின்னர் எத்தனை பக்தர்கள் வந்தார்கள் என்பது கணக்கிடப்படும்.

பக்தர்களுக்கு கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தெளிவாகக் காண்பிப்பதற்காக ட்ரோன் மூலம் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்திற்குள் பெரிய ட்ரோனை இயக்குவது பாதுகாப்பானதாக இருக்காது. அது யாரிடமாவது மோதி கீழே விழும் வாய்ப்பு இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவிலுக்கு வெளியே இருந்து நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ் ஓதுவார்கள் பங்கேற்று தமிழ் மந்திரங்களை ஓதினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் பாடப்பட்டன. அனைத்து கோபுரங்களிலும் ஓதுவார்கள் தமிழ் பாடல்களைப் பாடினர். தமிழோடு இணைந்தும், தமிழுக்கு முன்னுரிமை அளித்தும் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நேற்று அனுமதி கேட்டிருந்த ஓதுவார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கலசங்களிலும் தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன.

பாஸ் தொடர்பாகவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகம், கோவில் நிர்வாகிகளின் பரிந்துரைகள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு உரிய முறையில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களை கோவில் நிர்வாகத்தினர் வழங்குவார்கள்.

எந்த இடத்திலும் ஏற்பாடுகளில் எந்தவிதமான குறைபாடும் ஏற்படவில்லை. நானும் தற்போது ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய கவனம் முழுவதும் பொதுமக்களுக்கான ஏற்பாடுகளில்தான் உள்ளது. சிறப்பு ஏற்பாடு, சிறப்பு அழைப்பு அல்லது சிறப்பு தரிசனம் போன்றவற்றில் நாங்கள் யாரும் சென்று பங்கேற்கவில்லை. காலை முதலே விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில்தான் அனைவரும் கவனம் செலுத்தி வருகிறோம்.

நாங்கள் அனைவரும் கீழே இருந்துதான் ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் தரிசனம் செய்யும் பகுதிகளில் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட அனைத்து பிரஷர் பாயிண்ட்களும் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன.

காலையில் ஒரு சில ஊடகங்கள் சில இடங்களில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து பேட்டி எடுத்ததைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் அழுத்தம் அதிகரித்தது. இதுகுறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் எந்தெந்த இடங்களில் பொதுமக்கள் அதிகமாகக் குவிந்திருந்தார்களோ, அந்த பகுதிகளில் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு சிலரை படிப்படியாக உள்ளே அனுமதித்து தரிசனம் செய்ய வைக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு உரிய தகவல் தெரியாமல் நெருக்கடி ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம். அதற்காக உடனடியாக ஒரு முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த விழாவும் பாதிக்கப்படும். எனவே பொறுமையாக இருந்து, எந்தெந்த இடங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ, அந்த இடங்களில் காவல்துறையினர் படிப்படியாக பொதுமக்களை வெளியேற்றினர். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அதன்பிறகு மற்றவர்களை படிப்படியாக உள்ளே அனுமதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதலில் காலை 10 மணிக்குப் பொதுமக்களை அனுமதிப்பது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில பகுதிகளில் பொதுமக்களின் நெருக்கடி அதிகமாக இருந்ததால், காலை 8.30 மணி முதலே படிப்படியாக அவர்களை உள்ளே அனுமதிக்கத் தொடங்கினோம்.

தற்போது அனைத்து பகுதிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சிசிடிவி காட்சிகளிலும் பார்க்க முடியும். முன்னதாக இருந்த நெருக்கடி தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நெருக்கடி அதிகமாக இருந்ததால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு படிப்படியாக அனுமதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் ஒரு சில இடங்களில் வெளியேறும் பாதை சற்று நெருக்கடியாக இருக்கலாம். அந்த நிலை சரிசெய்யப்பட்ட பிறகு, காவல்துறை திட்டமிட்டுள்ளபடி முழு அளவில் பொதுமக்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வந்துள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ஊடகங்களுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் நன்றி. கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

இதையும் படிங்க: 100% ரெடி..! மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு..!! ஏற்பாடுகள் தயார் என அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share