×
 

மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் அன்னதானம் வழங்குவதற்கு உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற நிலையில், கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்காக 50 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இதையொட்டி கோவிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்காக கோவிலுக்கு அருகில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் மகா அன்னதானம் நடைபெற்று வருகிறது.

பழமுதிர்சோலை திருவருள் முருக பக்தர்கள் டிரஸ்ட் சார்பில் இந்த அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்குவது இந்த டிரஸ்டின் வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல், தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி, பக்தர்களுக்காக 50 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் தள்ளுமுள்ளு நடந்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்...!

இதற்கான உணவு தயாரிப்பு பணிகள் நேற்று மாலை முதலே தொடங்கின. 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து காய்கறி நறுக்குதல், அரிசி தயாரித்தல் உள்ளிட்ட உணவு தயாரிப்புக்கு முந்தைய பணிகளில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இட்லி, கேசரி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவுகள் காலை உணவாக வழங்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தக்காளி சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, வடை, காரக்கறி, கூட்டு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த உணவுகளைத் தயாரிப்பதற்காக சுமார் 4 டன் காய்கறிகளும், 3 டன் அரிசியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்காக சுமார் 12 ஆயிரம் இட்லிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் அன்னதானம் வழங்குவதற்கு உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். அந்த வகையில், கோவிலைச் சுற்றியுள்ள 21 பகுதிகளில் மொத்தம் 21 பேருக்கு மட்டுமே அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மகா அன்னதானத்தில் மட்டும் தற்போது 50 ஆயிரம் பக்தர்களுக்கு தேவையான உணவு தயாராக உள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா என்பதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் பக்தர்கள் தொடர்ந்து கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த மகா அன்னதானம் நடைபெற்று வருகிறது.

மேலும், எதிர்பார்த்ததைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தால், அவர்களுக்கும் உணவு வழங்குவதற்கான கூடுதல் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக உணவு சமைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என டிரஸ்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழாவைக் காண வந்த பக்தர்கள் அறுசுவை உணவை அருந்திவிட்டு, மீனாட்சி அம்மனை மனதார தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு... மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு..! தொடர் விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share