×
 

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் நிர்வாகத்தைக் கையாள ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்து தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க உத்தரவிட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமான மதுரை அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கோயிலின் நிர்வாகப் பணிகளைக் கண்காணிக்கவும் கையாளவும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளதுடன், அதற்கான நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் பரம்பரை பூசாரி உரிமை அடிப்படையில் சுழற்சி முறையில் பூஜைகள் நடத்த அனுமதி கோரியும், பரம்பரை பூசாரி உரிமை தொடர்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் சீதாலெட்சுமி, தனம், பாண்டீஸ்வரி, ஆர்த்தி, ஜெகதீஸ்பாண்டியன் உள்ளிட்ட பூசாரி குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்ததுடன், திருக்கோயிலை அறநிலையத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உறுதி செய்தார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

இத்தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இருநீதிபதிகள் டிவிசன் அமர்வு மிகக் காட்டமான கருத்துகளைப் பதிவு செய்திருந்தது. அதாவது, பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடிக்கு அதிகமாகவும், தட்டுக் காணிக்கை மூலம் ரூ.1 கோடிக்கு மேலாகவும் பெரும் வருவாய் குவிகிறது. 

பரம்பரை பூசாரிகள் அந்த வருவாயைத் திருக்கோயில் கணக்கில் வரவு வைப்பதற்குப் பதிலாகத் தங்களது சொந்த ஆதாயத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் முறைகேடாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். கடவுளுக்குத் தொண்டு செய்வதை விடுத்து பக்தர்களின் காணிக்கைப் பணத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்காகத் தங்களுக்குள் சண்டையிட்டு நீதிமன்றங்களை நாடி மதச் சூழலையே களங்கப்படுத்தி வருகின்றனர். 

பக்தர்களின் நம்பிக்கையால் சேரும் உண்டியல் பணம் பூசாரிகளின் குடும்பச் சொத்து அல்ல, அது பொதுச் சொத்து" எனச் சாடி, அறநிலையத்துறை நிர்வாகத்தை முழுமையாக ஏற்பதை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சரவண பாண்டியன், சீதாலட்சுமி, ஜெகதீஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தீவிர விசாரணைக்கு வந்தன. 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் உள்ள பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வழிபாட்டு அமைதியைக் கருத்தில் கொண்டு, மதுரை பாண்டி முனீஸ்வரர் திருக்கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாக நடவடிக்கைகளையும் நடுநிலையுடன் கையாள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். 

மேலும், இதற்குப் பொருத்தமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் பெயரைத் தேர்வு செய்து விரைந்து பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share