அடேங்கப்பா..!! பிரதமரின் ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ.30 கோடி செலவாம்..!! பகீர் கிளப்பிய மாணிக்கம் தாகூர்..!!
ஆட்சியின் கடமை மக்களின் வாழ்வை உயர்த்துவது; அரசியல் காட்சிகளை அல்ல என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தின்போது, நிகழ்ச்சிக்காக ஒரே நாளில் ரூ.30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது உயரமான மேடைகள் அமைக்கப்பட்டன, பிரமாண்டமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டன, பிரகாசமான ரோடு ஷோக்கள் நடத்தப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இத்தகைய பிரம்மாண்டமான அரசியல் காட்சிகளுக்கு பின்னால் மக்களின் உண்மையான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பது போன்ற மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்பது அவரது கருத்து.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!
அரசின் முதன்மைக் கடமை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே என்பதை நினைவூட்டும் மாணிக்கம் தாகூர், தற்போது பிரதமரின் வருகைக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் வளர்ந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார். இத்தகைய செலவுகள் மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து வருவதால், அதை அரசியல் மேடைகளுக்காகப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த அரசியல் போக்கு வேரூன்றக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். தமிழ்நாடு என்றுமே மக்கள் நல ஆட்சியின் மண், மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மாநிலம் என்ற பெருமையைப் பேண வேண்டும் என்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், பாஜக-அதிமுக கூட்டணியை அரசியல் ரீதியாக தடுப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் செலுத்தும் வரிப்பணம் புனிதமானது என்பதை நினைவூட்டும் அவர், அதைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடமே உள்ளது என்று வலியுறுத்தி முடித்துள்ளார். இந்தப் பதிவு, தமிழ்நாட்டில் அரசியல் செலவினங்கள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது பலரிடமும் எதிரொலித்து வருகிறது.
இதையும் படிங்க: “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!