மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?
வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு புதுச்சேரியில், தற்போதைய அமைச்சராக இருக்கக்கூடிய மரிய வில்சன், புதுச்சேரியில் வசிக்கும் தனது சகோதரரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, “நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல” எனக் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமராக இருந்தபோதுகூட நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
“மனுதாரர் மாநிலத்தின் நிதியமைச்சர்தான். அமைச்சராக இருப்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவி வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டாரா?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் வேளாங்கண்ணி ஆலயக் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணிக்குச் சென்று திரும்பி வரும் நேரத்தில்கூட புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் ஒன்றும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. அதுபோன்ற ஒரு தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க நீதிமன்றமும் விரும்பவில்லை” என நீதிபதி தெரிவித்தார்.
எனவே, அமைச்சர் எந்தத் தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்பதை அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை! வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!