27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை! வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!
ஆவணங்கள் இருந்தும் பள்ளிக்கல்வித்துறையில் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் மீது நிதியமைச்சர் மரிய வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தபோதிலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தங்களைக் கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தாம் ஒரு முக்கிய சாட்சியாக இருப்பதாகவும் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாகவும் சைக்கிள் பேரணியாகவும் வேளாங்கண்ணியை நோக்கிச் சென்று வருகின்றனர்.
இந்த வரிசையில், வேளாங்கண்ணி மாதாவைத் தரிசனம் செய்யும் நோக்கில் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அமைச்சர் மரிய வில்சன், இந்த ஆண்டும் பக்தர்களுடன் இணைந்து புதுச்சேரியில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டு இன்று கடலூர் மாவட்டத்தை வந்தடைந்தார்.
இதையும் படிங்க: லஞ்சம் கொடுத்தேன்..! பேரவையில் புயலை கிளப்பிய மரிய வில்சன்... அன்பில் மகேஷ் பதிலடி.!!
கடலூரில் பாதயாத்திரையின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சட்டப்பேரவையில் லஞ்சம் கொடுத்ததாகத் தாங்கள் குறிப்பிட்ட விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நான் யாருக்கும் நேரடியாக லஞ்சம் கொடுக்கவில்லை; ஆனால் முறையான ஆவணங்களுடன் செயல்பட்ட ஒரு தனியார் பள்ளிக்கு அரசு அனுமதி பெறுவதற்காகப் பரிந்துரை செய்தபோது, அரசுத் துறையில் காலதாமதம் ஏற்படுத்தித் திட்டமிட்டுக் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்ட பின்னரே கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அநீதிக்கு நானே ஒரு நேரடி சாட்சியாக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
எவ்வளவு தொகை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது என்பது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பான முழு விவரங்களையும் வரப்போகும் நாட்களில் வெளிப்படையாகப் பார்ப்பீர்கள்; இது குறித்து மேலும் விளக்கங்களை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!