“வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!
கடந்த ஆண்டுகளில் மாடித் தோட்டம் என்றும், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்றும் வழங்கப்பட்ட திட்டங்களின் கீழ் காய்கறி விதைத் தொகுப்புகளும், பழச்செடி தொகுப்புகளும் மட்டுமே மானியத்தில் வழங்கப்பட்டன.
இன்றைய பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது வேளாண் துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகளின் நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு செயல்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும், விவசாயிகள் பெருமளவில் கோரிய புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கத்தில் பசுந்தாள் உர விதைகளுக்கு 75% மானியம், மடக்கி விதைப்பதற்கு 100% மானியம், காட்டன் பிளஸ், சுகர் கேன் பூஸ்டர், ரைஸ் பப்ளூம் போன்ற உயிர் பயிர் ஊக்கிகள் வழங்குதல், உயிர்ம வேளாண் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல், நெல் விதை உற்பத்தி மானியம், நெல் விதை விநியோக மானியத்தை ஒன்றிய அரசு நிறுத்திய நிலையில், அதனை நமது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்தில் திரவ காட்டுப்பன்றி விரட்டி, சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், தமிழ்நாடு தளிர்க்கும் இலைகள் திட்டம், சாமந்திப் பூக்களின் பூக்கும் தருணத்தை சந்தை தேவைக்கேற்ப மாற்றுவதற்கு எல்.இ.டி. விளக்குகள், மா, கொய்யா போன்ற பல பயிர்களுக்கு பல்வேறு உரைகள், வாழைக்கு குலை உரை, நன்னெறி வேளாண் நடைமுறைகளுக்கு GAP கொண்டு நஞ்சில்லா விலைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம், நகரங்களில் வேளாண்மையை வலுப்படுத்துதல், தென்னை டானிக் வழங்குதல், வெற்றி வான்மகள் திட்டம், ட்ரோனோடு பயிற்சியும் உரிமமும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: "வறட்சி எங்கே?.. புகழ்ச்சி மட்டுமே!" டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லை என மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள நீர்ப்பாசன வசதி இல்லாத விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளைப் போர்வெல் அல்லது குழாய்க் கிணறுகள், டியூப் வெல் அமைத்தல், 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள், தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம், உயிர்ம வேளாண் விலைப்பொருட்களை சந்தைப்படுத்த உரிய வசதி ஏற்படுத்த வல்லுநர் திறன் கொண்ட தனிப்பிரிவு, புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (Farmer Producer Organisation) உருவாக்கி ஒவ்வொரு பங்குதாரருக்கும் சமபங்கு மானியம் அளித்தல், விவசாயிகளுக்கும் வேளாண் தொழில் முனைவோருக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வழிகாட்ட வேளாண் வணிக வழிகாட்டு மையம், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலையை நிலைப்படுத்த சந்தை இடையீட்டுத் திட்டம், விலை நிலைப்படுத்தல் நிதி, வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி என புதிய திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மண்ணில் விழுகின்ற ஒவ்வொரு மழைத்துளிக்கும் மதிப்பு இருக்கிறது. அதைவிட அதிகமான மதிப்பு அந்த மண்ணில் விழுகின்ற உழவனின் ஒவ்வொரு வியர்வைத் துளிக்கும் இருக்கிறது. அந்த வியர்வைத் துளிகள்தான் நமது இல்லங்களில் உணவாகின்றன. நமது குழந்தைகளின் பசியைப் போக்குகின்றன. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
அதனால்தான் இந்த அரசு விவசாயிகளுக்கு நாம் உதவி செய்கிறோம் என்ற பார்வையோடு செயல்படவில்லை. மாறாக, தமிழ்நாட்டிற்கு உணவளிக்கும் உழவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறோம் என்ற உணர்வோடு இந்த அரசு செயல்படுகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக, மகுடம் வைத்தாற்போல், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளுக்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.289-ம், சாதாரண ரகத்திற்கு ரூ.159-ம் ஊக்கத்தொகை அறிவித்து, நெல் விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 மற்றும் ரூ.2,600 ஆக உயர்த்தியுள்ளார்.
மேலும், கரும்புக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.295 ஊக்கத்தொகை அறிவித்து, கரும்பு விலையை ரூ.4,000 உயர்த்தி, நெல் விவசாயியின் வயிற்றில் பாலையும், கரும்பு விவசாயியின் வயிற்றில் தேனையும் வார்த்துள்ளார் நம் தலைவர்.
கரும்பின் சர்க்கரைக் கட்டுமானம் 9.5% முதல் 10.5% வரை இருக்கும்போது ரூ.4,000-ம், அதற்கு மேல் சர்க்கரைக் கட்டுமானம் அதிகரிக்கும்போது அதற்கு ஏற்றபடி கரும்பு விலையும் உயரும் என்றும் இம்மாமன்ற உறுப்பினருக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் பெயரை மட்டும் மாற்றி திட்டங்களை அறிவித்ததாகத் தெரிவித்தனர். அது குறித்து விளக்கத்தை இங்கு நான் அளிக்க விரும்புகிறேன்.
ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களில் பல்வேறு கூறுகள் இருந்த நிலையில், அவற்றில் சில கூறுகளுக்கு விவசாயிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்ததால், அவ்வாறான கூறுகளை நீக்கியும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவையான வேறு இனங்களைச் சேர்த்தும், அத்திட்டங்களுக்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, முந்தைய ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் உயர் மதிப்புத் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 12,525 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு, 2025-26 ஆம் ஆண்டோடு முடிவுற்ற நிலையில், அத்திட்டத்தின் ஒரு கூறான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின் இணைப்பு அல்லது சூரியசக்தி பம்புசெட்டுடன் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தைக் கைவிடாமல், அதனையும் இணைத்து அய்யா அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் உருவாக்கப்பட்டு, இதற்கென ரூ.56 கோடியே 72 லட்சம் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கான விருதுகளுக்கு குறைந்தபட்ச பயிரீட்டுப் பரப்பு ஐந்து ஏக்கரிலிருந்து இரண்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டு, சிறு, குறு விவசாயிகளும் பங்கேற்று பயனடையும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு, மக்களுக்காக சேவையாற்றிய அஞ்சலி அம்மா பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2004 முதல் செயல்படுத்தப்படும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டித் திட்டத்தில் முதல் பரிசுக்கான பரிசுத்தொகை ரூ.15,000-லிருந்து ரூ.50,000 ஆகவும், இரண்டாம் பரிசுக்கான தொகை ரூ.10,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்தப்பட்டு, விவசாயிகளை உயர்த்திக் காட்டிடும் வகையில், அதற்கு ‘வெற்றி விவசாயி விருது’ என்று பொருத்தமான பெயர் வைத்துள்ளோம்.
கடந்த ஆண்டுகளில் மாடித் தோட்டம் என்றும், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்றும் வழங்கப்பட்ட திட்டங்களின் கீழ் காய்கறி விதைத் தொகுப்புகளும், பழச்செடி தொகுப்புகளும் மட்டுமே மானியத்தில் வழங்கப்பட்டன.
தற்போது புதிய அம்சங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்தில் காய்கறி விதைகள், தென்னைநார் கட்டிகள், செடி வளர்ப்புப் பைகள் மற்றும் இடுபொருளுடன் கூடிய தொகுப்புகளுடன், மொட்டைமாடி இல்லாதவர்கள் சுவற்றில் தொட்டிகளை மாட்டி செடிகளை வளர்க்கும் வண்ணம் செங்குத்துத் தொட்டிகள், வெர்டிகல் கார்டன், ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் மொட்டைமாடியில் வளர்க்கப்படும் செடிகள் பாதிக்கப்படாத வண்ணம் 100 சதுர அடியில் பச்சை நிழல்வலைக் கூடார அமைப்பு ஆகியவை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், நீடித்த நிலையான பருத்தி இயக்கம் கடந்த ஆண்டுகளில் சுமார் ரூ.12 கோடி மானிய நிதியில் செயல்படுத்தப்பட்டதை யாரும் இங்கு மறுக்கவில்லை.
ஆனால், இந்த ஆண்டு முதல் அடர் நடவு, நெருக்க நடவு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நுனி கிள்ளுதல், மிக நீண்ட இலைப் பருத்தி சாகுபடி ஆகியவற்றை உள்ளடக்கிய, பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய ஐந்தாண்டு இயக்கம், ஒன்றிய-மாநில அரசு திட்டமாக, ஒன்றிய அரசால் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.26 கோடி நிதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், பருத்தி உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்ற நோக்கில் ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ என்று பெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாக மாற்றி அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதுதானே பொருத்தமாக இருக்கும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே?
எல் நினோ நிகழ்வினால் தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு பெரும் அச்சுறுத்தல் நேரிட்டுள்ளது. மேட்டூர் அணையில் குறைந்த நீர் இருப்பின் காரணமாக, எப்போதும் பாசன நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ரூ.134 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அளிக்கப்பட்டு, குறுவை நெல் இயல்புப் பரப்பான 10.60 லட்சம் ஏக்கரில் இதுவரை 8.41 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில், குறிப்பாக விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்தல் ஆகிய இனங்கள் டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கை செய்யப்பட்டு, பயிர் செய்ய இயலாத விவசாயிகள் மற்றும் பயிர் செய்து 30 நாட்களுக்குள் பாதிப்படைந்த பயிர்களுக்கு, பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி சராசரியாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.23,465 பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டில் குறுவைப் பருவத்தில் 2.77 லட்சம் ஏக்கர் மட்டுமே 1.5 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர் 1.34 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை இம்மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
இது தவிர, பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்தார்கள்.
இதைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செலவினத்தின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கு 36 லட்சம் ஏக்கர் பரப்பினைக் காப்பீடு செய்யும் வகையில் ரூ.648 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
100% பயிர் காப்பீட்டைக் கொள்கையாகக் கொண்டுள்ள இந்த அரசு, விருப்பத்தின் பெயரில் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்யப்படும் என்பதைப் பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு... ரூ.2.5 லட்சம் டு 50,000 வரை பரிசு... யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?