ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார் வலியுறுத்தல்..!!
விநாயகர் சதுர்த்திக்கு ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வழிபாட்டு பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நயினார் வலியுறுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!” என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார் என்று குறிப்பிட்ட நாகேந்திரன், தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்த முழுமுதற் கடவுள்தான் நம் விநாயகப் பெருமான் என்றார்.
அந்த வேழமுகத்தோனின் திருவிழாவை உலக மக்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடத் தயாராகி வரும் வேளையில், அத்திருவிழாவை மறைமுகமாக முடக்கும் வேலையில் முதல்வர் திரு. விஜய் அவர்களின் அரசு ஈடுபடுகிறதோ என்கிற வலுவான ஐயம் எழுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களின் பக்தி உணர்வோடு அமைக்கும் வழிபாட்டுப் பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ரூ. 3,800, டெபாசிட் தொகையாக ரூ.4,000 செலுத்த வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய நாகேந்திரன், வயரிங் செலவு உள்ளிட்ட பணிகளுக்கென ஒரு விநாயகர் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமார் ரூ.15,000 வரை செலவாவதோடு, கமர்சியல் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!
அண்டை மாநிலமான ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கிப் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் மட்டும் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர் என்று அவர் கூறினார். எனவே, முதல்வர் ஜோசப் விஜய் அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதோடு, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!