×
 

5 வருஷத்தில் 5 கட்சி மாறிய அமாவாசை நிர்மல் குமார்: நெல்லையில் ஆர்.பி. உதயகுமார் ஆவேச பேட்டி!

5 வருடத்தில் 5 கட்சிக்கு சென்ற அமாவாசை தான் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் என நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார்.

அதிமுகவிலிருந்து சுயநலத்திற்காகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற நிர்வாகிகளைத் தொண்டர்களின் சாபம் சும்மா விடாது என்றும், ஐந்து ஆண்டுகளில் ஐந்து கட்சிகளுக்குச் சென்ற அமாவாசை தான் தற்போதைய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் அமைச்சராக இருந்தபோது எங்களைச் சுற்றி அரணாக நின்ற சிலர் இன்று சுயநலத்திற்காக ஓடிவிட்டாலும், உண்மையான சாமானியத் தொண்டர்கள் இன்னமும் அதிமுகவிலேயே உறுதியாக இருக்கிறார்கள். கொத்தனார் வேலைக்குச் சென்றால் கூட முன் அனுபவம் கேட்கும் சூழலில், எவ்வித அரசியல் மற்றும் நிர்வாகப் பயிற்சியும் இல்லாத ஜோசப் விஜய்யிடம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளது ஒரு மாய பிம்பமே தவிர வேறில்லை எனக் கூறினார்.

இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!

மேலும் தவெக அமைச்சர்களையும் ஆட்சியையும் தோலுரித்த அவர், அதிமுகவிலிருந்து பதவி வெறியால் தவெக கட்சிக்கு ஓடியவர்கள் தொண்டர்களின் வயிற்றெரிச்சலால் சாம்பலாகப் போவார்கள். 5 வருடத்தில் 5 கட்சிக்குச் சென்ற 'அமாவாசை' தான் இன்றைய மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார். பொய் சொல்வதில் அவர் கின்னஸ் சாதனையே படைத்திருக்கிறார். மின்சாரக் கட்டணம் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை உயர்ந்து மக்கள் தவிக்கும் நிலையில், மின்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அவர் பேசி வருகிறார். முதலமைச்சர் விஜயை கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுவது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மாபெரும் தலைகுனிவு ஆகும் என ஆவேசப்பட்டார்.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போய் கிடக்கின்றன. மேகதாது விவகாரத்தில் தவெக அரசு சரியான வாதங்களை எடுத்து வைக்கத் தவறியதால் தான் கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகா திறந்துவிடவில்லை. அனுபவமில்லாத அரசாரங்கத்தால் மின்சாரமும் இல்லை, தண்ணீரையும் பெற முடியவில்லை. ஊழல் ஒழிந்துவிட்டதாக வெறும் மாயையை மட்டுமே தவெக அரசு கட்டமைத்து வருகிறது எனச் சுடச்சுடப் பேட்டி அளித்தார். ஆர்.பி.உதயகுமாரின் இந்த அதிரடிப் பேச்சு தென் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share