×
 

தனிமரம் தோப்பாகாது...ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து ஜான் பாண்டியன் விமர்சனம்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஓ. பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்து செயல்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த சந்தேகங்கள் இன்று உண்மையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முறைப்படி திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ஓபிஎஸ்-ன் இந்த முடிவை கடுமையாகச் சாடியதுடன், இது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். அரசியலில் தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது. ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவு. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மக்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

ஓபிஎஸ் என்பவர் திமுக-வின் பி டீம் மற்றும் பினாமி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த பல மாதங்களாகக் கூறி வந்த குற்றச்சாட்டு, இன்று ஓபிஎஸ் அண்ணா அறிவாலயத்தில் திமுக-வில் இணைந்ததன் மூலம் 100% உறுதியாகிவிட்டதாக அதிமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர், அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அதே திமுக-வில் தஞ்சம் புகுந்திருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடித்த சனி விட்டுவிட்டது என அதிமுக-வின் சி.வி. சண்முகம் ஏற்கனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிடித்த சனி விட்டுவிட்டது.. அதிமுகவுக்கு இன்றுதான் தீபாவளி! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் தேவர் சமூக வாக்குகளைக் குறிவைத்து ஓபிஎஸ்-ஐ திமுக இழுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது பாஜக மற்றும் அதிமுக கூட்டணிகளின் பலத்தைப் பாதிக்காது என ஜான் பாண்டியன் உறுதிபடக் கூறினார்.

ஓபிஎஸ்-ன் இந்தத் திடீர் அரசியல் மாற்றம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களின் வாக்கு வங்கியில் எந்தளவுக்குப் பிரதிபலிக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: "நான் என்ன தவறு செய்தேன்? இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார்!" ஓ. பன்னீர்செல்வம் உருக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share