"துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!
புதிய அமைச்சரவையில் துறைகள் கேட்டு முதலமைச்சர் விஜய்க்கு எந்தவித நிர்பந்தமும் செய்யவில்லை என்று தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்தத் துறைகளை ஒதுக்க வேண்டும் என்று தாங்கள் முதலமைச்சர் விஜயிடம் எவ்வித நிர்பந்தமும் செய்யவில்லை என்றும், முழுமையான முடிவை அவரது விருப்பத்திற்கே விட்டுவிட்டோம் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாளை நடைபெறவுள்ள புதிய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் கூட்டாட்சி முறை குறித்து விரிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிரிஷ் சோடங்கர், "தமிழக அமைச்சரவையில் நாளை காங்கிரஸ் கட்சி முறைப்படி இடம் பெறவுள்ளது ஒட்டுமொத்தக் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு உணர்ச்சிமிகுந்த தருணமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகச் சிறப்பாகவும், தீவிரமாகவும் மக்கள் பணியாற்றி வந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அதிகாரப் பகிர்வு கிடைத்துள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முதலமைச்சர் விஜயிடம் எவ்வித நிபந்தனையோ அல்லது நிர்பந்தங்களையோ விதிக்கவில்லை. துறைகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடமே காங்கிரஸ் தலைமை ஒப்படைத்துள்ளது" என்று விளக்கமளித்தார்.
தென்னிந்திய அரசியலில் காங்கிரஸின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், "தெற்கில் ஏற்கனவே கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகச் சிறந்த ஆட்சியைத் தந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் முறைப்படி பங்கேற்கிறது. இதனை மாநிலக் கட்சியின் வளர்ச்சியில் ஒரு மிக நல்ல தொடக்கமாகப் பார்க்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். குறிப்பாக, ராகுல் காந்திக்குத் தமிழக மற்றும் கேரள மக்கள் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் எப்போதும் உண்டு. இதனைத் தமிழ்நாட்டில் ஒரு புதிய கூட்டணி ஆட்சிக்கான தொடக்கமாகவே பார்க்கிறோம். எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இடதுசாரி இயக்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கூட்டணிக் கட்சிகளும் தயவுசெய்து இந்த அமைச்சரவைக்குள் உள்ளே வர வேண்டும்; இந்த புதிய கூட்டணி ஆட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சகாப்தத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்" என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!
நாளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தியாகம் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அவரது நினைவு நாளும், தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் இடம் பெறுவதும் ஒரே நாளில் அமைந்தது முற்றிலும் தற்செயலானது (எதார்த்தமாக அமைந்தது). இதனை நாங்கள் மறைந்த எங்களது தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாகச் சமர்ப்பிக்கிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இறுதியாக, "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்தும், விசிக அமைச்சரவையில் இணைவது குறித்தும்" செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கிரிஷ் சோடங்கர், "மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகளே இந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பித்தான் தவெக-வை அசுர பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். அதேபோல், விசிக அமைச்சரவையில் இணைவது என்பது முற்றிலும் அவர்களுடைய சொந்தக் கொள்கை முடிவு. அதில் நாம் எவ்வித அழுத்தமும் கொடுக்கக் கூடாது. எந்தவொரு அதிகாரப் போட்டியும் இல்லாமல் அனைத்துக் கட்சிகளும் தற்போது தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அரசாங்கத்தை முறைப்படி அறிவித்துவிட்டது, மக்களும் அதற்கு முழுமையாக வாக்களித்துள்ளனர். நாம் அனைவரும் அந்த அரசாங்கத்தில் இணைந்து ஒரு முழுமையான, தரமான கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்களுக்குத் தருவோம்" என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!