×
 

"துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். ஒன்பது கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறினார்.

தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ள நிலையில், அரசுக்கு பத்து இலட்சம் கோடி கடன் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆயிரத்து இருநூறு கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவர்களின் வியாபாரத் தலங்கள் ஆகியவை உள்ள பட்டினப்பாக்கத்தின் குறுகிய சாலைகளில் ஏற்கெனவே பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்நிலையில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்பட்டால் பகுதி முழுவதும் திணற நேரிடும் என்றும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வருகைக்காக மணிக்கணக்கில் போக்குவரத்து நிறுத்தப்படும் அவலம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்தார். 

இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சுனாமி ஆபத்து உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இல்லையென்றால், பாதிக்கப்படும் ஒன்பது கிராம மீனவ மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று அறிவித்தார். மீனவ மக்களிடம் பேசிய அவர், சேலம் எட்டுவழிச் சாலை, பரந்தூர் வானூர்தி நிலையம், கடலில் பேனா சிலை ஆகியவற்றை தடுத்து நிறுத்தியதுபோல, பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தையும் ஒருபோதும் அமையவிடமாட்டோம் என்றும், மக்களின் துணையுடன் உறுதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் உறுதியளித்தார். மீனவச் சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ரூ.1200 கோடி..! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share