சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள்! மாநகராட்சி மூலம் மின்னணு ஏலம் தொடக்கம்!
சென்னையில் கேட்பாரற்றுக் கிடந்த 5,543 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 1,936 வாகனங்களை மாநகராட்சி இ-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது.
சென்னை பெருநகரப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருவோரங்களில் பல ஆண்டுகளாகப் போக்குவரத்துக்கு இடையூறாகக் கேட்பாரற்றுக் கிடந்த மற்றும் உரிமை கோரப்படாத 5,543 வாகனங்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக மின்னணு ஏலத்தில் விற்பனை செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில், பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டத் துணை ஆணையாளர்கள் தலைமையில் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல ஆண்டுகளாகத் துருப்பிடித்து சாலையோரங்களை ஆக்கிரமித்து நின்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் என மொத்தம் 5,543 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த வாகனங்களை வெளிப்படையான முறையில் ஏலம் விடுவதற்காக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கலந்தாலோசித்து முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தால் முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின்னணு ஏல அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 28) புனித தோமையர் மலை மாவட்டத்தில் 180 வாகனங்களும், ஆகஸ்ட் 31 அன்று கீழ்ப்பாக்கம் மாவட்டத்தில் 362 வாகனங்களும், செப்டம்பர் 2 அன்று திருவல்லிக்கேணியில் 522 வாகனங்களும், செப்டம்பர் 7 அன்று வண்ணாரப்பேட்டையில் 592 வாகனங்களும், செப்டம்பர் 9 அன்று கொளத்தூரில் 98 வாகனங்களும், செப்டம்பர் 11 அன்று பூக்கடை மாவட்டத்தில் 182 வாகனங்களும் மின்னணு ஏலம் விடப்படவுள்ளன. எஞ்சியுள்ள 3,607 வாகனங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அவற்றுக்கான ஏலத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?
மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 9 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 102 வாகனங்களை, நீதிமன்ற உத்தரவு மற்றும் உரிய மதிப்பீட்டின்படி எம்.எஸ்.டி.சி இணையதளம் வாயிலாக மின்னணு ஏலம் விடுவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனமா? சட்டசபையில் மீண்டும் சூடுபிடித்த விவாதம்!!