×
 

#BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

சிபிசிஐடி போலீசார் விரிவான இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தனிநபர்கள் இருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, பழனி காவல்துறையினரும் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, நேற்று நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், மாநில காவல்துறையால் இந்த வழக்கின் உண்மையை முழுமையாக வெளிக்கொணர முடியாது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு துறைகளின் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதால், விசாரணை மீது சந்தேகம் எழுந்துள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.

எனவே, இந்த வழக்கை சிபிசிஐடியிடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பழனி நகராட்சியின் முன்னாள் மாமன்றத் தலைவர் உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மூன்று வழக்குகளும் இன்று நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரவீந்திரன் மற்றும் வீரா கதிரவன் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் வாதிடுகையில், "சிபிசிஐடி போலீசார் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், நேற்று அவசரமாக நான்கு பேரை கைது செய்துள்ளனர். இது விசாரணையின் தன்மையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் மட்டுமே உண்மை வெளிவரும்" என்று தெரிவித்தனர்.

மேலும், "பதிவாளர் அலுவலகம் தொடர்புடைய மற்றொரு அரசு நிலமும் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த வழக்கை முழுமையாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் அரசியல் சாயம் பூச முயற்சிக்கின்றன. ஆனால் சிபிசிஐடி போலீசார் நேர்மையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? எத்தனை பேரை கைது செய்துள்ளனர்? விசாரணை எந்த நிலையில் உள்ளது?" என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இடைக்கால நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

மேலும், அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா அல்லது சிபிசிஐடி விசாரணையே தொடர வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் விரிவான இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share