×
 

உயிரே போனாலும் ஆக.13 முதல் மூலிகை பெட்ரோல் விநியோகம்... அண்ணாமலைக்கு ராமர் பிள்ளை வைத்த திடீர் கோரிக்கை...!

தன்னுடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை வரும் 13 ஆம் தேதி பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாக மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த ராமர் பிள்ளை மூலிகையிலிருந்து பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோலை ரூபாய் 20 க்கு விற்பனை செய்ய உள்ளதாக பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறார். இவரது கண்டுபிடிப்பு ரசாயனம் என கூறி சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாக மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். 

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கூடுதல் நீதிமன்றம் என் மீதும் எனது மூலிகை பெட்ரோல் மீதும் தவறு இல்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியது. ராமர் பிள்ளையிடம் கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரிடம் வழங்க வேண்டும். அவரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த தொகையை 23 வருட வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

எனது கண்டுபிடிப்பு தவறாக இருந்தால் பல ஆண்டுகளுக்கு முன் வழக்கு பதிவு செய்யும்போது எனக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், விற்பனை சான்று ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. வங்கியில் எனது கணக்கில் இருந்த 35 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டிருந்தது. தற்போது எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் தி நகர் யூகோ வங்கியில் போய் வட்டியுடன் பணத்தை கேட்டதற்கு பணம் மாயமாகி விட்டதாக கூறுகிறார்கள். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பணத்தை மீட்க மூன்று வழக்கறிஞர்களை நியமித்தும் அவர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். தற்போது நான்காவது வழக்கறிஞரை நியமித்திருக்கிறேன். அவரது அறிவுரையின்படி தமிழக முதல்வருக்கு எனது பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தேன். அவரது உத்தரவின்படி தி நகர் காவல் துறையினர் வங்கியில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையிலும் வங்கி கணக்கில் இருந்த பணம் மாயமானதாக அறிக்கை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சிக்கிய 2 பக்க கடிதம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலையில் திடீர் ட்விஸ்ட்... 7 பேர் மீது அதிரடி நடவடிக்கை..!

எனவே நீதிமன்றமே தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தெரிவித்து விட்டனர். இந்த அறிக்கையை மூலமாக வைத்து மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இது தொடர்பான விசாரணைக்கு நாளை வங்கி அதிகாரிகள் ஆஜராக உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் எரிபொருள் நிறுவனம் எனக்கு உதவி செய்கிறது. எனது கண்டுபிடிப்பை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். இறுதியான சோதனைக்கு என்னுடைய கண்டுபிடிப்பு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சில நாட்களில் சோதனை முடிவு வந்தவுடன், நான் இருப்பு வைத்துள்ள மூலிகைகளை கொண்டு சுமார் 10 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்க உள்ளேன். அவர்களின் ஒத்துழைப்புடன் சுதந்திர தினத்திற்கு முன்னதாக எனது கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்க உள்ளேன். உயிரே போனாலும் 13ஆம் தேதி எனது கண்டுபிடிப்பை மக்கள் கையில் சேர்க்க உள்ளேன்.

என்னுடைய உயிரை உங்கள் காலடியில் வைத்து விட்டு நாளை சென்னை நீதிமன்றத்திற்கு செல்கிறேன். ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கிறேன். நான் தயாரிக்க உள்ள 10 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோலில், ஒரு கோடி லிட்டர் என்னை நம்பி பணம் கொடுத்த நண்பர்களுக்கும், மீதமுள்ள ஒன்பது கோடி லிட்டர் பெட்ரோலை இந்திய ராணுவத்துக்கும் வழங்க தயாராகிவிட்டேன். இதில் ஏதேனும் தவறு நடந்தால் என் மீது வழக்கு போடலாம். என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் கட்சியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எனது அனைத்து சோதனைகளும் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி, கல்வீச்சு.. நெல்லையில் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share